அடுத்த ஷங்கர் படத்துல இதைப் பார்க்கலாமா... உலகின் மின்னல் வேக ரயில்... ஸ்பீடு மணிக்கு 380 கி.மீ!
பெய்ஜிங்: உலகிலேயே அதிவேகமான ரயில் சேவை அடுத்த மாதம் சீனாவில் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ரயிலானது சுமார் 380 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியதாம்.
மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள செங்ஷோவ் நகர் மற்றும் கிழக்கு சீனாவில் உள்ள ஜூஷோவ் மாகாணத்திற்கு இடையே இந்த ரயில் இயக்கப்படவுள்ளது. இதன் மூலம், இந்த மாகாணங்களுக்கு செல்வதற்காக முந்தைய இரண்டரை மணிநேர பயணம் இனி 80 நிமிடங்களாக குறைந்து விடுமாம். சோதனை ஓட்டத்தின்போது இந்த ரயிலானது 400 கிலோ மீட்டர் என அதன் உச்சக்கட்ட வேகத்தில் இயக்கப்பட்டதாம்.
அதிவேக ரயில்களின் இயக்கத்துக்காக சுமார் 16,000 கிலோமீட்டர் நீளம் கொண்ட தண்டவாள வழிதடத்தை சீனா அமைத்துள்ளது. இந்தப் பாதை வழியாக நடைபெற்ற ரயில் போக்குவரத்தின் மூலம் கடந்த ஆண்டு மட்டும் சீனாவிற்கு 100 கோடி டாலர் வருமானம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வகையிலான அதிவேக ரயில்களை உலகின் மற்ற நாடுகளுக்கும் சந்தை படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இது போன்ற தொழில்நுட்பத்தை கொண்டு வர சீனா திட்டமிட்டுள்ளது. இதனையொட்டி தற்போது, சென்னை - டெல்லி இடையே அதிவேக ரயில் இயக்க சீன நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.