மிஸ்ஸான ஸ்கெட்ச்.. போதையில் எதிரிக்கு பதில் நண்பனையே குத்திய ரவுடி! அடுத்து நடந்த அதிர்ச்சி ட்விஸ்ட்
காஞ்சிபுரம்: ஓட்டலில் உணவு வர லேட்டானதால் ஆத்திரமடைந்த ரவுடி ஒருவர், தான் வைத்திருந்த கத்தியை எடுத்து ஓட்டல் உரிமையாளரை குத்துவதற்கு பதிலாக போதை மயக்கத்தில் அருகில் இருந்த தனது நண்பனையே குத்திய சம்பவம் காஞ்சிபுரத்தில் அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும், அதிக அளவில் ரத்த இழப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நண்பனையே கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய ரவுடியையையும், அவரது கூட்டாளியையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

ரவுடி சகவாசம்..
காஞ்சிபுரம் மாவட்டம் செட்டியார் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (26). ஆட்டோ ஓட்டுநரான இவர் மீது பல அடிதடி வழக்குகள் காவல் நிலையங்களில் உள்ளன. தற்போது கூட அடிதடி வழக்கு ஒன்றில் கைதாகி, கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ஜாமீனில் அவர் வெளியே வந்தார். வெங்கடேசனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த காக்கா சுரேஷ் என்ற ரவுடியுடன் சகவாசம் இருந்தது. இதனால் அவருடன் சேர்ந்து அந்தப் பகுதியில் அடாவடித்தனத்தில் வெங்கடேசன் ஈடுபடுவது வழக்கம்.

ஜாமீனில் வெளிவந்ததால் 'ட்ரீட்'
இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்ததால் நண்பர்களுக்கு ட்ரீட் வைப்பதாக வெங்கடேசன் கூறியுள்ளார். இதையடுத்து, ரவுடி காக்கா சுரேஷ், மற்றொரு ரவுடி சக்தி (எ) கலர் கோழிக்குஞ்சு ஆகியோருடன் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சாபி தாபா ஓட்டலுக்கு வெங்கடேசன் சென்றுள்ளார். அப்போது மூவரும் நன்றாக மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது.

சாப்பாடு வர லேட் - கலர் கோழி 'அப்செட்'
ஓட்டலுக்கு சென்ற அவர்கள் விதவிதமான உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் உணவு கொண்டு வருவதற்கு தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் ரவுடி சக்தி என்ற கலர் கோழிக்குஞ்சு மிகவும் அப்செட் ஆகிவிட்டாராம். இதை பார்த்த வெங்கடேசனும், காக்கா சுரேஷும் நேராக ஓட்டல் உரிமையாளர் குட்டி என்பவரிடம் சென்று தகராறு செய்துள்ளனர்.

நெஞ்சில் பாய்ந்த கத்தி
அப்போது குட்டியை இருவரும் சேர்ந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர், குட்டியை வெங்கடேசன் பிடித்துக் கொள்ள, காக்கா சுரேஷ் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து குட்டியை குத்த பாய்ந்துள்ளார். ஆனால், மதுபோதை தலைக்கேறிய நிலையில், யார் எங்கு இருக்கிறார்கள் என தெரியாமல் அருகில் இருந்த தனது நண்பன் வெங்கடேசனையே அவர் கத்தியால் குத்தினார். இதில் வெங்கடேசனின் நெஞ்சில் கத்தி பாய, அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதை பார்த்த காக்கா சுரேஷும், சக்தியும் அங்கிருந்து சிதறி ஓடினர். பின்னர் தகவலறிந்த போலீஸார், அங்கு வந்து வெங்கடேசனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய காக்கா சுரேஷை போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications