கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் விறுவிறு வாக்குப்பதிவு நிறைவு.. பொன். ராதாகிருஷ்ணன் வாக்களித்தார்!
கன்னியாகுமரி: இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
மக்களவை தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு
தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. கொரோனா அச்சுறுத்தல், கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். இதேபோல் மக்களவை இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி தொகுதியிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது.
பொன். ராதாகிருஷ்ணன் போட்டி
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் 8-வது முறையாக களம் காண்கிறார். இவரை எதிர்த்து மறைந்த எச்.வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். மேலும் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் உட்பட மொத்தம் 12 வேட்பாளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
மக்கள் எழுச்சி
பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் எஸ்.எல்.பி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் சுமார் அரை மணி நேரம் காத்திருந்து வாக்குகளை பதிவு செய்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், ' தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு செய்ய மக்களிடம் பேரெழுச்சி காணப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் 75% வாக்குகள் பதிவாகும் என்று அவர் தெரிவித்தார்.
விஜய்வசந்த் களமிறங்கினார்
இதேபோல் விஜய்வசந்தும் சென்னையில் தனது வாக்கினை பதிவு செய்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்த நேரத்தில் தோராயமாக 64 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இறுதியான வாக்குப்பதிவு சதவீதம் இன்று இரவு 12 அல்லது 1 மணியளவில் தெரியவரும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.