டான்சர் ஜாகீன் உசேன் மீதான பாலியல் புகார் - எடுத்த சபதம் முடிப்பேன் -கரூர் ஆசிரியை திட்டவட்டம்!
கரூர்: பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் மீதான பாலியல் புகார் விவகாரத்தில் அடுத்த கட்டமாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாக கரூர் இசைப்பள்ளி ஆசிரியை திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு கலை பண்பாட்டு துறையின் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞர், பரத நாட்டியக் கலைஞரான ஜாகீர் உசேன். தமிழகத்தின் இசை பள்ளிகளில் ஜாகீர் உசேன் ஆய்வுக்கு சென்ற போது பாலியல் தொல்லை கொடுத்தார்; அத்துமீறி நடந்து கொண்டார் என அடுத்தடுத்து ஆசிரியைகளிடம் இருந்து புகார்கள் வந்தன.
பாஜக பொங்கினது போங்கா?பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் மீதான பாலியல் புகார் போர்ஜரி என அம்பலம்!
இது தொடர்பாக தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை இயக்குநருக்கு கரூர் ஆசிரியை அனுப்பிய புகார் கடிதம் ஒன்றில், கலையியல் அறிவுரைஞர் ஜாகிர் உசேன் எங்கள் பள்ளிக்கு ஆய்வுக்கு வந்தார்.தலைமை ஆசிரியை அறைக்கு என்னை மட்டும் உள்ளே வரச்சொல்லி கதவை மூடினார். அங்கு என் தோள்பட்டை மேல் கை வைத்து இடுப்பின் மீது கைகளை மடக்கி வைத்து இப்படி நடனமாட வேண்டும் என சொல்லி மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார் என கூறியிருந்தார். இதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் இருந்தும் ஜாகீர் உசேன் மீது புகார் எழுந்தது.
பாஜக விமர்சனம்
இதனையடுத்து ஜாகீர் உசேன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; அடுத்த 24 மணிநேரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் பேட்டி கொடுத்தனர். ஜாகீர் உசேனை மனித மிருகம் என்றெல்லாம் கூட விமர்சித்தனர். அத்துடன் ஶ்ரீரங்கம் கோவிலில் இருந்து ஜாகீர் உசேன் வெளியேற்றப்பட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆதாரமில்லை
இஸ்லாமியராக இருந்தாலும் இந்து கடவுள்களை வணங்குவதிலும் பரத நாட்டியத்தை வளர்ப்பதிலும் முனைப்புடன் திகழ்ந்தவர் ஜாகீர் உசேன். இஸ்லாமியர் என்பதற்காகவே கடுமையான விமர்சனங்களுக்குள்ளான ஜாகீர் உசேனுக்கு திமுக அரசுதான் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞர் பதவியும் கொடுத்தது. இந்நிலையில் ஜாகீர் உசேன் மீதான பாலியல் புகார் குறித்து பணியிடத்தில் பாலியல் தொல்லைகளை விசாரிக்கும் விசாகா கமிட்டி விசாரித்தது. இந்த விசாரணையில் ஜாகீர் உசேன் மீதான புகார்கள் அனைத்தும் மோசடியானவை; புனையப்பட்டவை என்பது அம்பலமாகி இருக்கிறது.
ஆசிரியை பேட்டி
இது தொடர்பாக புகார் கொடுத்த கரூர் இசைப்பள்ளி ஆசிரியை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி எங்கள் பள்ளியில் வழக்கமான ஆய்வு நடைபெற்றது. அதற்காக வந்த கலையியல் அறிவுரைஞர் ஜாகீர் உசேன் என்னை தனி அறைக்கு கூட்டி சென்று, என்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றார். இந்த சம்பவங்களை புகார் மனுவாக எழுதி கலை பண்பாட்டுத் துறை இயக்குனருக்கு அனுப்பி இருந்தேன்.மேலும் நேரில் சென்றும் நடந்த சம்பவங்களை முறையிட்டேன். இதையடுத்தே விசாரணை கமிட்டி அமைத்து ஏப்ரல் 5-ந்தேதி முதல் கட்ட விசாரணை நடந்தது. பின்னர் 2-வது கட்டமாக விசாகா கமிட்டி மூலம் ஏப்ரல் 22-ந்தேதி அன்று விசாரணை நடைபெற்றது.
சட்டப்பூர்வமான நடவடிக்கை
ஆனால் எனக்கு நீதி கிடைக்கும்; தவறு செய்தவருக்கு தண்டனை கிடைக்கும் என நம்பி இருந்தேன். இப்போது நான் கூறிய புகார் பொய்; சம்பந்தப்பட்ட நபர் நிரபராதி என்றும் கூறப்பட்டு வருகிறது. எனக்கு எப்படியும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன். நான் சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் சந்திக்கவும் தயாராக உள்ளேன் என்றார்.