"அலட்சியம் வேண்டாம்".. பாஜக அலுவலகங்களை முற்றுகையிடுவோம்.. சிபிஎம் பாலபாரதி ஆவேசம்
கரூர்: "100 நாள் வேலைத் திட்டத்தில் முறையான பணி, ஊதியம் வழங்காவிட்டால் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாலபாரதி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் அண்மைக்காலமாக 100 நாள் வேலைத் திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு மாநிலங்களில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை மத்திய அரசு குறைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இந்த திட்டத்தில் இணைந்து வேலை செய்வோருக்கு பல இடங்களில் குறைவான ஊதியம் கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் கூட சில பகுதிகளில் இந்த 100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமப்புற ஏழை, எளிய மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முற்றுகைப் போராட்டம்
அந்த வகையில், கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளில் நிறுத்தப்பட்டுள்ள 100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக தொடங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் தரகம்பட்டியில் உள்ள கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முற்றுகை மற்றும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

"தொழிலாளர்களுக்கு பாதிப்பு"
இந்தப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.பாலபாரதி தலைமை வகித்தார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 20 ஊராட்சிகளில் 100 நாள் வேலை நிறுத்தப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பங்கள் வருமானம் இன்றி நிர்கதியாக நிற்கின்றன.

"நிதி குறைக்கப்படுகிறது.."
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு வருகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை முறையாக தராமல், மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது. இதன் காரணமாக, நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு வேலை ஒதுக்கவும், ஊதியம் அளிக்கவும் முடிவதில்லை. இதற்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும்.

"பாஜக அலுவலகங்கள் முற்றுகை"
100 நாள் வேலை திட்டத்தின் கீழே பணியாளர்களுக்கு முறையான வேலை, ஊதியத்தை வழங்க வேண்டும். இல்லையெனில், மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு பாலபாரதி கூறினார். இதனிடையே, கரூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் அன்புமணி உள்ளிட்டோர் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து பாலபாரதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆட்சியரிடம் பேசி முறையாக பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதன் தொடர்ச்சியாக, போராட்டம் கைவிடப்ட்டது.












Click it and Unblock the Notifications