ஜாக்கிரதையாக இருக்க வேண்டாமா? கிணற்றில் விழுந்த மலைப்பாம்பு.. மீட்கச் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கிணற்றில் விழுந்த மலைப்பாம்பை மீட்கச் சென்றவரை அந்த பாம்பு இறுக்கியே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்த விலங்காக இருந்தாலும் அதனிடத்தில் மனிதர்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் தான் இருக்க வேண்டும். மேலும் அதை கையாளும் போது இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் எந்த நேரத்தில் அது எப்படி நடந்து கொள்ளும் என்பதை நம்மால் யூகிக்க முடியாது. சிறிது அலட்சியம் கூட பெரிய ஆபத்தில் கொண்டு சென்றுவிடும். இதனை மெய்ப்பிக்கும் விதமாக கிருஷ்ணகிரியில் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள குல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. விவசாயியான இவரது நிலத்தில் 50 அடிக்கும் ஆழமான கிணறு இருந்துள்ளது.
இங்கு நேற்று முன்தினம் நீர் இரைப்பதற்காக விவசாயி சின்னசாமி சென்றுள்ளார். அப்போது கிணற்றுக்குள் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், பாம்பை மீட்க சிறு சிறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அது கைக்கூடவில்லை.
இதனைத் தொடர்ந்து, கிணற்றில் இருந்து மலைப்பாம்பை வெளியே எடுப்பதற்காக கிராம மக்கள் உதவியை நாடியுள்ளார். அப்போது அவர்கள், பனகமுட்லு பகுதியைச் சேர்ந்த நடராஜ் என்பவரை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளனர்.
இதையடுத்து, நடராஜ் வீட்டுக்கு சென்ற சின்னசாமி, அவரை அழைத்து வந்துள்ளார். கிணற்றுக்குள் மலைப்பாம்பு இருப்பதை பார்த்த அவர், கிணற்றுக்கு மேலே கயிறை கட்டி உள்ளே இறங்கியுள்ளார்.
சிறிது நேரத்தில் மலைப்பாம்பை நெருங்கிய நடராஜ், அதனை லாவகமாக பிடித்துக் கொண்டு மேலே ஏறினார். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த மலைப்பாம்பு நடராஜின் கையை சுற்றி வளைத்தது. இதனால் அவரால் மேற்கொண்டு ஏற முடியவில்லை.
அதே சமயத்தில், மலைப்பாம்பும் அவரது உடலை இறுக்கத் தொடங்கியது. இதனால் நடராஜ் பிடி நழுவி மலைப்பாம்புடன் தண்ணீருக்குள் விழுந்தார். இதையடுத்து, மலைப்பாம்பு அவரை மெல்ல மெல்லமாக இறுக்கியது. இதில் உடல் எலும்புகள் உடைந்து மூச்சுத்திணறிய நடராஜ் அபயக்குரல் எழுப்பினார். ஆனால் மேலே உள்ள கிராம மக்களால் அவரை மீட்க முடியவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினர் அங்கு வந்து நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு, நடராஜை மீட்டனர். ஆனால் நடராஜ் உயிரிழந்து கிடந்தார்.
இதனைத் தொடர்ந்து, கிணற்றுக்குள் இருக்கும் மலைப்பாம்பை மீட்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.