"ஒரே ஜம்ப்!" ஜேசிபி வாகனத்தில் ஏறி.. உற்சாகமாக போஸ் கொடுத்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்!
லண்டன்: இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் புல்டோசரில் ஏறி போஸ் கொடுத்த வீடியோ இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது
Recommended Video
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இதற்காக இன்று குஜராத் வந்து இறங்கிய போரிஸ் ஜான்சனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், ஆளுநர் ஆசாரியா தேவ்ராட் மற்றும் அமைச்சர்கள் போரிஸ் ஜான்சனை வரவேற்றனர். அங்கிருந்து விடுதிக்குச் செல்லும் போது சுமார் 4 கிமீ தூரத்திற்கு அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

போரிஸ் ஜான்சன்
குஜராத் மாநிலத்தின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் நடனக் கலைஞர்கள் நடனம் ஆடினர். விடுதியில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த போரிஸ் ஜான்சன், அதன் பின்னர் சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றார். அங்குக் காந்தி பற்றி இருக்கும் குறிப்புகள், படங்களை போரிஸ் ஜான்சன் ஆர்வத்துடன் படித்துத் தெரிந்து கொண்டார். மேலும், அங்குள்ள கைத்தறி இயந்திரத்தை இயக்கவும், ஆசிரம ஊழியர்களுக்கு போரிஸ் ஜான்சனுக்கு கற்றுக் கொடுத்தனர். அவரும் அதை ஆர்வதுடன் இயக்கினார்.

ஜேசிபி தொழிற்சாலை
அங்குள்ள வருகை குறிப்பில் போரிஸ் ஜான்சன், "இந்த அசாதாரண மனிதரின் ஆசிரமத்துக்கு வருவதும், உண்மை மற்றும் அகிம்சை போன்ற எளிய கொள்கைகளைக் கொண்டு மக்கள் அவர் எப்படி அணி திரட்டினார் என்பதைப் புரிந்துகொள்வதும் எனக்குக் கிடைத்த பாக்கியம்" என எழுதி இருந்தார். இதையடுத்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உடன் போரிஸ் ஜான்சன், அங்கு பஞ்சமஹாலில் உள்ள ஹலோல் பகுதியில் உள்ள ஜேசிபி தொழிற்சாலைக்குச் சென்றார்.

ஜேசிபி வாகனத்தில் போரிஸ் ஜான்சன்
ஆலையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்த போரிஸ் ஜான்சன், திடீரென அங்கிருந்த புதிய ஜேசிபி வாகனத்தில் ஏறினார். அந்த ஜேசிபி வாகனத்தில் ஏறி அமர்ந்த அவர், அதை ஆப்ரேட் செய்யவும் முயன்றனர். பின்னர் உற்சாகமாக அவர் ஊடகங்களுக்கு கை அசைத்து, ஊடகங்களுக்கு போஸ் கொடுத்தார். அதன் பின்னர் அவர் மீண்டும் ஆலையைச் சிறிது நேரம் சுற்றிப் பார்த்து ஆய்வு செய்தார்.

இந்தியா பிரிட்டன்
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறி உள்ளதால், அந்நாட்டின் வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிற நாடுகள் உடனான வர்த்தகத்தை மேம்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, இந்தியாவுக்கும் பிரிட்டன் நாட்டிற்கும் இடையே வர்த்தகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போரிஸ் ஜான்சனின் இந்த இந்தியப் பயணத்திலும் முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications