ஏலத்திற்கு வருகிறது ஸ்டீபன் ஹாக்கிங்கின் வீல்சேர்!
லண்டன்: புகழ் பெற்ற இங்கிலாந்து இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்தி வந்த அதிநவீன வீல் சேர் ஏலம் விடப்படவுள்ளது. அதேபோல அவரது பிரபலமான பிஎச்டி ஆய்வுத் தொகுப்பும் ஏலத்திற்கு வருகிறது.
ஸ்டீபன் ஹாக்கிங் கடந்த மார்ச் மாதம் மரணமடைந்தார். தற்போது அவரது சில முக்கியமான பொருட்களை ஏலம் விடவுள்ளனர். புகழ் பெற்ற லண்டன் கிறிஸ்டி ஏல நிறுவனம் இதை மேற்கொள்ளவுள்ளது.

ஹாக்கிங் ஒரு அதி நவீன வீல்சேரைப் பயன்படுத்தி வந்தார். அதுதான் அவரது உலகமாக பல வருடம் இருந்து வந்தது. சகல வசதிகளையும் கொண்ட அதி நவீன வீல் சேரும் ஏலத்திற்கு வரும் பொருட்களில் ஒன்று. இதேபோல 1965ம் ஆண்டு அவர் எழுதிய பிஎச்டி ஆய்வுப் படிப்புக்கான ஆய்வுக் கட்டுரையும் ஏலத்திற்கு வருகிறது.
இந்த ஆய்வுக் கட்டுரையானது ஒன்றரை லட்சம் அமெரிக்க டாலர் வரைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வுக் கட்டுரையை தனது கைகளாலேயே எழுதியுள்ளார் ஹாக்கிங். அவரது உடல் நல கோளாறு காரணமாக விரல்கள் நடுங்கியபடியே இதை எழுதியிருப்பார் ஹாக்கிங். இதனால் எழுத்துக்கள் நேராக இருக்காது.
வீல் சேர் விற்பனை மூலம் வசூலாகும் பணம் அறக்கட்டளைகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்படவுள்ளதாம். மொத்தமாக ஹாக்கிங் பயன்படுத்திய 22 பொருட்கள் ஏலத்திற்கு வரவுள்ளதாக அவரது மகள் லூசி தெரிவித்துள்ளார். அக்டோபர் 31ம் தேதி ஏலம் தொடங்கவுள்ளது.












Click it and Unblock the Notifications