எலிசபெத் ராணி ஆகும்போது எங்கு இருந்தார் தெரியுமா..? ‘மரத்தில் ஏறும்போது இளவரசி.. இறங்கும்போது அரசி”!
லண்டன் : 70 ஆண்டு காலம் பிரிட்டன் அரசியாக கோலோச்சிய இரண்டாம் எலிசபெத் மறைந்த நிலையில், அவரைப் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இரண்டாம் எலிசபெத், இங்கிலாந்தின் ராணியானது எப்படியான சூழலில் என்பது பற்றிய தகவலை புகழ்பெற்ற வேட்டைக்காரரான ஜிம் கார்பெட் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஜிம் கார்பெட் தனது 'ட்ரீ டாப்ஸ்' நூலில் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி, அந்த சுவாரஸ்ய தகவலை தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ராணி எலிசபெத் மறைவுக்குப் பிறகு, அவரது இளமைக்காலம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் ஒரு மரவீட்டில் இருந்தபோது ராணியான தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
எலிசபெத் ராணி மறைவுக்கு வருத்தமா? இதோ உங்களுக்கான ஆஃபர்.. கொகைன் டீலர்களின் குறுஞ்செய்தி
ராணி இரண்டாம் எலிசபெத்
பிரிட்டன் இளவரசியான இரண்டாம் எலிசபெத் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 96. உடல்நலக் குறைவு காரணமாக ஸ்காட்லாந்த் பண்ணை வீட்டில் வசித்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத், சமீப நாட்களாக மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்ததாக சொல்லப்பட்டது. இதனால் அவருக்கு நெருக்கமான பலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் காலமாகி விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நீண்ட கால அரசி
பிரிட்டன் வரலாற்றில் மிக அதிக காலம் ராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத். கடந்த 1952ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் மகாராணியாக இருந்து வருகிறார் இரண்டாம் எலிசபெத். அவர் இறக்கும் வரை சரியாக 70 ஆண்டுகள் 214 நாட்கள் இங்கிலாந்தின் ராணியாக இருந்திருக்கிறார். இந்த நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உயிர் பல்மோரல் இல்லத்தில் அவர் உடலைவிட்டுப் பிரிந்தது. எலிசபெத்தின் உடல் 10 நாட்களுக்குப் பின் நல்லடக்கம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்ய தகவல்
இந்நிலையில், ராணி எலிசபெத் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில், இளவரசியாக இருந்த எலிசபெத் இங்கிலாந்தின் அரசியான தருணத்தில் அவர் ஒரு மரவீட்டில் இருந்துள்ளார். இங்கிலாந்து அரச மரபுப்படி, அவர் மர உச்சி வீட்டில் இருந்தபோதே ராணி ஆகியுள்ளார். தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ராணி எலிசபெத் மறைவையொட்டி இதுகுறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார்.
ட்ரீ டாப்ஸ் புத்தகம்
அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதிவில், 1952ஆம் ஆண்டு எலிசபெத்தின் தந்தை ஆறாம் ஜார்ஜ் மன்னர் மறைவுற்றவுடன் இங்கிலாந்தின் அரசியாக இரண்டாம் எலிசபெத் பொறுப்பேற்றுக் கொண்ட சூழ்நிலை குறித்து, ஒரு காலத்தில் புகழ்பெற்ற வேட்டைக்காரராக இருந்து பின்பு இயற்கை ஆர்வலராக கானுயிர் பாதுகாப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஜிம் கார்பெட் ( Jim Corbett) தன்னுடைய 'Tree Tops' என்ற புத்தகத்தில் சுவாரசியமான தகவல் ஒன்றைச் சொல்லி இருக்கின்றார்.
மர உச்சி வீடு
1952ஆம் ஆண்டு கென்யாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இளவரசி எலிசபெத்தும் அவரது கணவர் பிலிப்ஸும் நையீரி அருகே உள்ள Tree Tops என்றழைக்கப்பட்ட மரவீடு ஒன்றில் ஓரிரவு முழுவதும் தங்கி வனவிலங்குகளை இயற்கைச் சூழலில் கண்டுகளிப்பதற்காக வந்திருந்தனர். அங்கே அவர்களிருவரும் தங்கியிருந்த அதே இரவில் இளவரசியின் தந்தை ஆறாம் ஜார்ஜ் மன்னர் லண்டனில் மறைந்து விட்ட செய்தி மறு நாள் இளவரசிக்குத் தெரிவிக்கப்பட்டு அவரும் உடனடியாக லண்டன் திரும்பினார்.
மர உச்சியில் இருந்தபோதே அரசி ஆனார்
பிரிட்டிஷ் அரசகுல வழக்கப்படி மன்னரோ, அரசியோ மறைந்து விட்டால் அடுத்த நொடியே அரியணைக்கான அடுத்த வாரிசு அந்த இடத்திற்கு வந்துவிடுவார்கள் என்பது மரபு. Tree Tops-ல் இளவரசி எலிசபெத் இருந்த இரவிலேயே மன்னர் மறைந்துவிட்டதால் மரபுப்படி அந்தக் கணமே அவர் இங்கிலாந்தின் அரசியாக ஆகிவிட்டார். அது குறித்து தனது நூலின் இறுதியில் ஜிம் கார்பெட் மிக அழகாக குறிப்பிட்டுள்ளார்.
ஏறும்போது இளவரசி.. இறங்கும்போது அரசி
"உலக வரலாற்றிலேயே முதன் முறையாக இளம்பெண் ஒருத்தி மரம் ஒன்றில் இளவரசியாக ஏறி அதனின்று இறங்கும் போது மகாராணியாக இறங்கினார். கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும்." என்று ஜிம் கார்பெட் தனது 'ட்ரீ டாப்ஸ்' நூலில் குறிப்பிட்டுள்ளார். அரசியின் மறைவைத் தொடர்ந்து இந்தத் தகவல் மீண்டும் அதிகமாகப் பரவி வருகிறது.