ராதிகாவாக மாறிய அம்ரினா! சனாதன தர்மத்தையும் ஏற்று.. உ.பியில் இந்து காதலனை கரம் பிடித்த இஸ்லாமிய பெண்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் இந்து மதத்திற்கு மாறி, சனாதன தர்மத்தை ஏற்று தான் காதலித்த இந்து இளைஞனை திருமணம் செய்துள்ளார். சமீப நாட்களாக வட மாநிலங்களில் லவ் ஜிகாத் குறித்த சர்ச்சைகள் அதிகரித்திருக்கும் நிலையில் தற்போது இந்த திருமணம் அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிஜ்னூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அமரினா. இவர் கல்லூரி முடித்து வேலை தேடி வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இவருக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. எடுத்து பேசும் போது வேறு ஒரு நபர் குறித்து எதிர் தரப்பில் பேசியவர் விசாரித்துள்ளார். உடனே தவறான எண்ணுக்கு அழைத்திருக்கிறீர்கள் என்று கூறி அம்ரினா கட் செய்துள்ளார்.
இதனையடுத்து அந்த நம்பரிலிருந்து மெஸேஜ் வந்திருக்கிறது. தொடக்கத்தில் இதனை தவிர்த்து வந்த அம்ரினா பின்னர் பேச தொடங்கினார். முதலில் மெசேஜ் பின்னர் போன் கால், அதனையடுத்து நேரில் சந்திப்பு என இவர்கள் நண்பர்களாகி பின்னர் காதலில் விழுந்துள்ளனர். அப்போதே இருவரும் திருமணம் செய்வதென்று முடிவெடுத்துள்ளனர். ஆனால் வட மாநிலங்களை பொறுத்த அளவில் மாற்று மதத்தினரை திருமணம் செய்து கொள்வது என்பது அவ்வளவு எளிதானது கிடையாது.
சுப காரிய தடையா?..திருமணம் கைகூடவில்லையா..அனுமனுக்கு செய்யும் இந்த வழிபாடு வெற்றியை தேடித் தரும்
இந்து மதம்
அதிலும் இந்து-இஸ்லாம் திருமணம் எனில் பெரும் கலவரமே வெடித்துவிடும். இவ்வாறு இருக்கையில் தங்களுடைய திருமணத்தை எப்படி நடத்துவது என்பது குறித்து கலந்தாலோசித்துள்ளனர். பின்னர் காதலன் பப்பு கோரி ஒரு ஐடியா கொடுத்திருக்கிறார். அதன்படி அம்ரினா இந்து மதத்திற்கு மாறி பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்வது என்பதுதான் இந்த ஐடியோ. இதற்கு அம்ரினாவும் ஒப்புக்கொண்டுள்ளார். எனவே பரேலியில் உள்ள அகஸ்தியமுனி ஆசிரமத்தில் உள்ள இந்து கோயில் ஒன்றில் இதற்கான சடங்குகள் நடந்தன. இதனை கேகே ஷங்கதர் எனும் பண்டிதர் முன்னின்று நடத்தியுள்ளார்.
பெயர் மாற்றம்
இதன்படி முதலில் அம்ரினா இந்து மதத்திற்கு மாறியுள்ளார். இவரது பெயர் அம்ரினா என்பதிலிருந்து ராதிகா என்று மாற்றப்பட்டுள்ளது. பின்னர் இவர் சனாதன தர்மத்தையும் நால் வேதங்கள் சொல்லும் நியதிகளையும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து இவரது காதலன் பப்பு கோரியுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. பப்பு அம்ரினா எனும் ராதிகாவின் நெற்றியில் திலகமிட்டு மாலையை மாற்றி திருமணம் செய்துகொண்டுள்ளார். இவ்வாறு இஸ்லாம் மத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறி பெண்கள் இந்து ஆண்களை திருமணம் செய்து கொள்ளும் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதிக திருமணங்கள்
குறிப்பாக இவர்களுக்கு திருமணம் செய்து வைத்த பண்டிதர் கேகே ஷங்கதர் இதேபோல 64 திருமணங்களை செய்து வைத்துள்ளதாக கூறியுள்ளார். இது போன்று பெண்களை மதம் மாற்றி திருமணம் செய்து வைப்பதால் தான் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த திருமணம் குறித்து ராதிகா கூறுகையில், "எங்கள் தாய் மதமான இஸ்லாத்தில் முத்தலாக் எனும் கொடுமை இருக்கும். சமீபத்தில் எங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடந்தது ஆனால் அவளது கணவர் திடீரென முத்தலாக் கூறி இவளை வீட்டிலிருந்து வெளியில் அனுப்பிவிட்டார். எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
மதமாற்ற தடை சட்டம்
அதன் பின்னர்தான் நான் இம்முடிவுக்கு வந்தேன். இனி எனக்கு முத்தலாக் குறித்த பயம் கிடையாது. நான் நிம்மதியாக இருக்கலாம்" என்று கூறியுள்ளார். உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமலில் இருக்கிறது. இதன்படி திருமணத்திற்காக மதம் மாறுவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்து பெண்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இச்சட்டம் சொல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.