உத்தர பிரதேசம் கோலா கோக்கரன்நாத் இடைத்தேர்தல்.. பாஜக அசத்தல் வெற்றி.. டெபாசிட் இழந்த ஆம் ஆத்மி!
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் 'கோலா கோக்கரன்நாத்' சட்டசபை தொகுதிக்கு கடந்த 4ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.
தொடக்கம் முதலே பாஜக வேட்பாளர் அமன் கிரி முன்னிலையில் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் 34,298 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார். இந்த வெற்றி ஆளும் பாஜக அரசுக்கு கூடுதல் பலத்தை சேர்த்திருக்கிறது.

நேரடி போட்டி
நாடு முழுவதும் உத்தரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 4ம் தேதி நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்தலில் அதிகபட்சமாக தெலங்கானாவின் முனுகோட் தொகுதியில் 77.55% வாக்குகளும், மகாராஷ்டிராவின் அந்தேரி தொகுதியில் 31.74% என மிக குறைந்த அளவிலும் வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. உத்தரப் பிரதேசத்தின் 'கோலா கோக்கரன்நாத்' சட்டசபை தொகுதியின் ஏற்கெனவே எம்எல்ஏவாக இருந்த அரவிந்த் கிரியின் மகன் அமன் கிரி பாஜக சார்பில் களமிறக்கப்பட்டார்.

தேர்தல் முடிவுகள்
இந்நிலையில் இந்த தொகுதியில் பாஜகவும், சமாஜ்வாதி கட்சியும் நேரெதிராக போட்டியிட்டது. மட்டுமல்லாது ஆம் ஆத்மி சார்பிலும் ஒருவர் களமிறக்கப்பட்டார். காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சி ஆகியவை போட்டியிடவில்லை. இந்நிலையில் காலை 9:30 மணி நிலவரப்படி ஆளும் பாஜக வேட்பாளர் முன்னிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இவரைத் தொடர்ந்து சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் 8 ஆயிரம் வாக்குகள் பின்தங்கியிருந்தார். இந்நிலையில் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் பாஜக வேட்பாளர் அமன் கிரி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு வித்தியாசம்
தன்னை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் வினய் திவாரியை 34,298 வாக்குகள் வித்தியாசத்தில் அமன் கிரி வீழ்த்தியுள்ளார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தனது தந்தையின் கனவை நிறைவேற்றிவிட்டதாக கூறியுள்ளார். மேலும், தொகுதியின் வளர்ச்சியை உறுதி செய்வேன் என்றும், தனது ஆதரவளித்த மக்களுக்கும் வாய்ப்பளித்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கும் நன்றி தெரிவித்தார். இந்த தேர்தலில் மொத்தம் 2,23,352 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் கிரி 1,24,810 (55.88%) வாக்குகளை பெற்றிருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல்
இவரையடுத்து வினய் திவாரி 90,512 (40.52%) வாக்குகளை பெற்றிருக்கிறார். ஆம் ஆத்மி வேட்பாளர் டெபாசிட் இழந்திருக்கிறார். பஞ்சாபில் ஆட்சியை பிடித்து, குஜராத்தில் தற்போது சட்டப் பேரவை தேர்தலுக்கு தயாராகி வரும் ஆம் ஆத்மிக்கு இந்த இழப்பு பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தற்போது வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகள் எதிர் வரும் குஜராத், இமாச்சலப் பிரதேசம், டெல்லி (மாநகராட்சி) ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநில தேர்தல் முடிவுகள்தான் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும். எனவே தேர்தல் நடைபெற்ற 6 மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சியினர் இந்த தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைத்திருந்தனர். அதன் பலன்கள்தான் தற்போது முடிவுகளாக வந்துள்ளது.












Click it and Unblock the Notifications