உபி-இல் குடியரசு தலைவர் பயணம்.. டிராஃபிக்கில் நிறுத்தப்பட்ட பெண் நோயாளி பலி.. மன்னிப்பு கேட்ட போலீஸ்
லக்னோ: குடியரசுத் தலைவரின் பயணம் காரணமாக அமல்படுத்தப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாடுகளால் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் உத்தரப் பிரதேச போலீசார் மன்னிப்பு கோரியுள்ளனர்.
பொதுவாக நாட்டின் முக்கிய தலைவர்களின் வருகைகளின் போது பாதுகாப்பு காரணங்களால் போக்குவரத்து மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அப்படி திடீரென அறிவிக்கப்படும் கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொள்வார்கள்.
இதனால் சரியா நேரத்தில் மருத்துவமனைகளைக்கூடப் பொதுமக்களால் செல்ல முடியாத நிலை ஏற்படும் அப்படியொரு நிலை தான் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்துள்ளது.

குடியரசுத் தலைவர் ரயில் பயணம்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்திற்கு ரயில் மூலம் பயணித்துள்ளார். இதற்காக 14 பெட்டிகளைக் கொண்ட ஜனாதிபதி எக்ஸ்பிரஸ் தயார் செய்யப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளில் குடியரசுத் தலைவர் ஒருவர் ரயிலில் பயணிப்பது இதுவே முதல்முறையாகும். மூன்று நாள் பயணமாக உத்தரப் பிரதேசம் சென்றுள்ள அவர் பல்வேறு இடங்களுக்குச் செல்லவுள்ளார்.

பெண் உயிரிழப்பு
அதன்படி நேற்று இரவு அவர் கான்பூர் சென்றடைந்தார். குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி கான்பூர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், கூடுதல் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்தச் சூழலில் தான் போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாகப் பெண் ஒருவர் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முடியாததால் உயிரிழந்த சோகம் அங்கு நடந்துள்ளது.

வந்தனா மிஸ்ரா
இந்திய தொழில்துறை சங்கத்தின் கான்பூர் பிரிவின் மகளிர் அணித் தலைவராக இருந்தவர் 50 வயதான வந்தனா மிஸ்ரா. சமீபத்தில் தான் கொரோனாவில் இருந்து இவர் குணமடைந்திருந்தார். இந்நிலையில், நேற்றிரவு இவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது அதேவழியால் குடியரசுத் தலைவர் வாகன செல்லவிருந்ததால், அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன.

உயிரிழந்தார்
இதன் காரணமாக அவரை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை என கூறப்படுகிறது. நீண்ட சிரமத்திற்குப் பிறகு, வந்தனா மிஸ்ராவை அவரது குடும்பத்தினரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் இரங்கல்
இந்நிலையில் இது குறித்து கான்பூர் போலீஸ் கமிஷ்னர் தனது ட்விட்டரில், "கான்பூர் காவல்துறை சார்பாக வந்தனா மிஸ்ராவின் மறைவுக்கு மிகவும் வருந்துகிறேன். இது எதிர்காலத்திற்கு எங்களுக்கு ஒரு பெரிய பாடமாக அமைந்துள்ளது. இனி வரும் காலங்களில் மக்களை மிகக் குறுகிய காலத்திற்கு மட்டும் நிறுத்தி வைக்கும் வகையில் திட்டமிடுவோம். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் கண்டிப்பாக நிகழாது. இந்தச் சம்பவம் பற்றி கேள்விப் பட்டு குடியரசுத் தலைவர் கவலையுற்றார். அவர் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications