‛80 தொகுதி’.. பிரதமர் மோடி வேற இருக்காரே! உத்தர பிரதேசத்தில் ராகுல் யாத்திரை எத்தனை நாள் தெரியுமா?
லக்னோ: ராகுல் காந்தி 2வது கட்டமாக மணிப்பூரில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை இன்று தொடங்கி உள்ளார். இந்தியாவில் அதிக நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் உள்ள நிலையில் அங்கு காங்கிரஸ் கட்சி செல்வாக்கை இழந்துள்ளது. மேலும் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி எம்பியாக உள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தி எத்தனை நாட்கள் யாத்திரை செல்கிறார்? அது காங்கிரஸ் கட்சிக்கு பாசிட்டிவ்வாக அமையுமா? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்னும் 4 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிலோமீட்டர் தொலைவுக்கு ‛பாரத் ஜோடோ யாத்திரை' என்ற நடைப்பயணத்தை தொடங்கினர்.

இது காங்கிரஸ் கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்தது. இதன் தொடர்ச்சியாக ராகுல் காந்தி 2வது கட்டமாக யாத்திரையை தொடங்கி உள்ளார். மணிப்பூரில் இன்று ராகுல் காந்தியின் யாத்திரையை அந்த கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கி வைத்தார்.
இந்த யாத்திரை முந்தைய யாத்திரையை விட சற்று வித்தியாசமானது. பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி நடந்தே சென்றார். ஆனால் இந்த யாத்திரையில் அவர் நடந்து செல்வதோடு, வாகனங்களிலும் பயணிக்க உள்ளார். மொத்தம் 66 நாட்கள் நடக்கும் இந்த யாத்திரையில் ராகுல் காந்தி 6,713 கிலோமீட்டர் தொலைவை கடந்து மார்ச் மாதம் 20ம் தேதி மும்பையில் முடிக்கிறார்.
இந்த யாத்திரையானது மணிப்பூர், நாகலாந்து, அசாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா என
15 மாநிலங்களில் மொத்தம் 110 மாவட்டங்களில் 337 சட்டசபை தொகுதிகள், 100 நாடாளுமன்ற தொகுதிகள் வழியாக நடைபெற உள்ளது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் உத்தர பிரதேசம் தான்.
அதாவது இந்தியாவில் அதிக நாடாளுமன்ற தொகுதிகள் உத்தர பிரதேசத்தில் தான் உள்ளது. மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. இங்கு அதிக இடங்களை பெற்றால் அந்த கட்சியால் மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியும். கடந்த 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் இங்கு பாஜக அதிக இடங்களை கைப்பற்றியது. 2014ல் 71 இடங்களிலும், 2019ல் 62 தொகுதிகளிலும் பாஜக வென்றது. அதோடு உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி களமிறங்கி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளார்.
மாறாக காங்கிரஸ் கட்சி 2014ல் 2 தொகுதியில் ஜெயித்தது. சோனியா காந்தி ரேபரேலிலும், ராகுல் காந்தி அமேதியிலும் வென்றனர். அதன்பிறகு 2019 தேர்தலில் சோனியா காந்தி மட்டுமே ரேபரேலியில் ஜெயித்தார். ராகுல் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் அமேதியில் தோற்றார். தற்போது உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி மட்டுமே எம்பியாக உள்ளார். இந்நிலையில் தான் வரும் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அந்த வகையில் ராகுல் காந்தி இந்த யாத்திரையை திட்டமிட்டுள்ளார். அதன்படி தற்போது 15 மாநிலங்களில் யாத்திரை செல்லும் ராகுல் காந்தி உத்தர பிரதேசத்தில் தான் அதிக நாட்கள் பயணிக்கிறார். உத்தர பிரதேசத்தில் மட்டும் அவர் 11 நாட்களில் 20 மாவட்டங்கள் வழியாக 1,074 கிலோமீட்டர் தொலைவை கடக்க உள்ளார். இந்த வேளையில் ராகுல் காந்தி தனது தாய் சோனியா காந்தியின் ரேபரேலி, தான் தோல்வியடைந்த அமேதி மற்றும் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி வழியாக பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேச உள்ளார். இதனால் உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இருப்பினும் ராகுல் காந்தியின் இந்த யாத்திரை என்பது உத்தரபிரதேசத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போதே கூறிவிட முடியாது. ஏனென்றால் பாஜக தனது பிரதான அஸ்திரமான ராமர் கோவிலை தேர்தல் அறிக்கையில் கூறியபடி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டி உள்ளது. மேலும் உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடப்பதோடு, முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இந்த 2 விஷயங்களை தாண்டி உத்தர பிரதேச மக்கள் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பார்களா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications