உ.பி. சட்டசபை தேர்தல்.. மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன், ஸ்கூட்டி.. அறிவிப்புகளை அள்ளிதெளித்த பிரியங்கா!
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு மீண்டும் ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது. உத்தரபிரதேசத்தில் பா.ஜ.கவுக்கு அடுத்தபடியாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியே பிரதான கட்சியாக இருக்கிறது.
பல காலம் இந்தியாவை ஆண்ட பாரம்பரியமிக்க காங்கிரஸ், உ.பி.யில் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. அங்கு பா.ஜ.க.வுக்கு அதிருப்தி அலை வீசுவதால் இந்த முறையாவது பாஜகவிடம் இருந்து ஆட்சியை பறித்து விட வேண்டும் என்று காங்கிரஸ் துடியாய் துடிக்கிறது.

காங்கிரசுக்கு ஏமாற்றம்
இந்த முறையும் உ.பி.யில் காங்கிரசுக்கு பெரும் ஏமாற்றமே கிடைக்கும் என்று கருத்து கணிப்புகள் உலா வந்தாலும் ஆட்சியை பிடித்தே தீருவோம் என்று காங்கிரஸ் விடாப்பிடியாக உள்ளது. இதற்காக இப்போதிருந்தே பல்வேறு வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டது. சமீபத்தில் உ.பி லக்கிம்பூர் படுகொலை சம்பவத்தை மிக கச்சிதமாக கையில் எடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது காங்கிரஸ்.

முதல்வர் வேட்பாளரா?
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ராகுல்காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளரும், உ.பி. காங்கிரஸ் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி ஆகியோர் தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவு 'காங்கிரஸ் நமது பக்கம் நிற்கிறது' என்ற நம்பிக்கையை விவசாயிகளுக்கு கொடுத்துள்ளது. அதுவும் உ.பி.யில் விவசாயிகள், மக்களுக்கு எதிராக எந்த அநீதி நிகழ்ந்தாலும் முதல் ஆளாக சென்று விடுகிறார் பிரியங்கா காந்தி. தொடர்ந்து அவர் உ.பி.யில் கவனம் செலுத்தி வருவதால் அங்கு முதல்வர் வேட்பாளராக போட்டியிடுகிறாரா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

பிரியங்கா காந்தியின் அறிவிப்புகள்
கிட்டத்தட்ட உ.பி.யிலேயே முகாமிட்டு இருக்கும் பிரியங்கா காந்தியின் அறிவிப்புகள் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் 40 சதவீத பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார் பிரியங்கா. இதற்கு கட்சிக்குள்ளும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மின்னணு ஸ்கூட்டி
இந்த நிலையில் இன்று மாணவர்களுக்காக இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் பிரியங்கா காந்தி. இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், '' நான் சில மாணவர்களைச் சந்தித்தேன், படிப்பதற்கும், தங்களை பாதுகாப்பதற்கும் ஸ்மார்ட்போன்கள் தேவை என்று சொன்னார்கள். இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும் என்றும் இளங்கலை மாணவர்களுக்கு மின்னணு ஸ்கூட்டி. வழங்கப்படும் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக் குழுவின் ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications