நான் என்ன செம வெயிட்டா?.. சிரிப்புடன் சமாளித்த பிரியங்கா காந்தி
லக்னோ: எடைக்கு எடை லட்டு கொடுப்பதற்கு ஏற்பாடு செய்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் கோரிக்கையை பிரியங்கா காந்தி புன்முறுவலுடன் மறுப்பு தெரிவித்து புறப்பட்டு சென்றார்.
உத்தர பிரதேசத்தின் கிழக்கு பிராந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சாலை மார்க்கமாக செல்லும் அவரை காணவும், அவரது பேச்சைக் கேட்கவும் ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரியங்கா காந்தி, அவரது சகோதரர் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் இருந்து, சோனியா காந்தியின் தொகுதியான ரேபரலிக்கு நேற்றிரவு சென்றார்.
எனக்கா நிற்க சீட் இல்லை.. ஆபீஸில் வாங்கி போட்ட 300 சேர்களை தூக்கி கொண்டு போன காங்கிரஸ் எம்எல்ஏ!
சிரிப்புடன் மறுப்பு
இரவு செல்லும் வழியில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிலர் கூடாரத்தை அமைத்திருந்தனர். அங்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த பெரிய தராசில், காங்கிரஸ் கட்சியின் கொடி கட்டி பறக்க விடப்பட்டிருந்தன. அதில் ஒரு புறம் லட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மறுபுறம் பிரியங்கா காந்தியை அமரும்படி காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். அதற்கு சிரிப்புடன் மறுத்துவிட்டார்.
எடைக்கு,எடை லட்டு
தராசில் பிரியங்கா காந்திக்கு எடைக்கு, எடை லட்டு கொடுக்கப்பட்ட பிறகு தொண்டர்களுக்கு அந்த லட்டுகள் பகிர்ந்தளிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், அவர் மறுப்பு தெரிவித்தார். அப்போது, உட்காருங்கள் என குரல் எழுப்பினர். அதற்கு நான என்ன குவிண்டால் எடை என்றா நினைக்கிறீர்கள் என கேட்டார். இதனால், அங்கு சிரிப்பலை ஏற்பட்டது. இதனையடுத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிர்வாகியை தராசில் அமரவைத்தார் பிரியங்கா காந்தி. ஆனால், பிரியங்கா காந்தி கடைசி வரை ஒரு லட்டு கூட சாப்பிட்டதாக தெரியவில்லை.
அயோத்தியில் பிரச்சாரம்
உத்தரபிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரியங்கா காந்தி, பைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியில் பிரச்சாரம் செய்ய உள்ளார். மேலும் அப்போது, பிரபலமான ஹனுமான் காதி கோவிலுக்கு சென்று வழிபடுவார் என்றும் கூறப்படுகிறது.
கடும் போட்டி
கடந்த 2009 தேர்தலில் காங்கிரஸ் கட்சி பைசாபாத் தொகுதியையும், அதனை சுற்றியுள்ள பாராபங்கி, கோண்டா மற்றும் பஹ்ராச் போன்ற தொகுதிகளையும் வென்றது. ஆனால் 2014-ல், பா.ஜ.க.விடம் அனைத்து இடங்களையும் காங்கிரஸ் இழந்தது. இந்த தொகுதிகளை மீண்டும் தங்கள் வசம் கொண்டு வர, பிரியங்கா காந்திக்கு முன்னுரிமை கொடுத்து காங்கிரசில் பொறுப்பு வழங்கி உள்ளது.