சும்மா கை வைத்த எம்எல்ஏ.. அப்படியே சரிந்து விழுந்த கல்லூரி சுவர்! மெகா ஊழல் என யோகியை சாடும் அகிலேஷ்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மெகா ஊழல் நடைபெறுவதாகச் சாடி உள்ள அகிலேஷ் யாதவ், இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்தத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை உடன் வென்ற பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. யோகி ஆத்தியநாத் இரண்டாவது முறையாக முதல்வர் பொறுப்பு ஏற்றார்.
உத்தரப் பிரதேசம்
கடைசிக் கட்டத்தில் அகிலேஷ் யாதவ் கடுமையாகப் போராடிய போதிலும், அவரால் வெல்ல முடியவில்லை. கடந்த முறையைப் போல இல்லாமல், இந்த முறை தேர்தல் முடிந்ததில் இருந்தே பாஜகவுக்கு எதிராகத் தொடர்ந்து சமாஜ்வாடி கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். யோகி ஆட்சியை விமர்சிப்பது மட்டுமின்றி, பல இடங்களில் மெகா ஊழல் நடைபெறுவதாகவும் சமாஜ்வாடி கட்சியினர் சாடி வருகின்றனர்.
ஆய்வு
அப்படியொரு சம்பவத்தின் வீடியோ தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் சிவசத். இந்த கிராமத்தில் உத்தரப் பிரதேச அரசு சார்பில் புதிதாக அரசு கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இதனை அப்பகுதி எம்எல்ஏ என்ற முறையில் சமாஜ்வாதி கட்சியின் ஆர்.கே.வர்மா ஆய்வு செய்தார்.
கட்டிடம்
கல்லூரி கட்டிடத்தின் வலிமையைச் சோதனை செய்யும் வகையில் வர்மா கைகளைக் கொண்டு அந்த சுவரை மெல்லத் தள்ளினார். அப்போது அந்த சுவர் அப்படியோ பொலபொலவென சரிந்து விழுந்தது. இது சுவரின் வலிமையைக் கேள்வி எழுப்புவதாக உள்ளது. இப்படி மோசமாகக் கட்டப்பட்ட கட்டிடத்தில் மாணவர்களை எப்படி தைரியமாக அமர வைக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அகிலேஷ்
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவும் இது குறித்துச் சாடி உள்ளார். அவர் தனது ட்விட்டரில், "பாஜக ஆட்சியில் ஊழல் வேற லெவலுக்கு சென்று கொண்டு இருக்கிறது. சிமென்ட் கூட இல்லாமல், அவர்கள் இன்ஜினியரிங் கல்லூரியின் கட்டிடத்தைக் கட்டியுள்ளனர்" என்று சாடி உள்ளார்.
எம்எல்ஏ
பெல்கர்நாத் தாம் பகுதியில் திருமண விழாவிற்குச் சென்று திரும்பிய சமயத்தில், சிவசாத் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கல்லூரியின் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தரம் குறித்து புகார் அளித்ததாகவும் அதைத் தொடர்ந்து தான் ஆய்வு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். யோகி அரசில் நடக்கும் மெகா ஊழல்களுக்கு இந்தக் கட்டிடமே ஒரு சாட்சி என்றும் அவர் சாடினார்.
புகார்
இந்த வீடியோ சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஊரகப் பொறியியல் துறையைச் சேர்ந்த உதவிப் பொறியாளர் கட்டிடத்தின் மாதிரிகளை ஆய்வுக்காகச் சேகரித்தார். இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.