"உ.பி மக்கள் எனக்கு ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டார்கள், ஏனென்றால்.." பிரதமர் மோடி உருக்கம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தற்போது சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி அங்குச் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்,
நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்திற்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல் அங்கு நடந்து முடிந்துள்ளது.
அடுத்து 4ஆம் கட்ட தேர்தல் வரும் பிப். 23ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் மத்திய உபி-இல் உள்ள 9 மாவட்டங்களில் மொத்தம் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி
இதையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்களும் அங்குத் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் உபி-இல் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் குறித்தும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டது குறித்தும் குறிப்பிட்டுப் பேசினார், மேலும், உத்தரப் பிரதேச மக்கள் தன்னை ஒரு போதும் ஏமாற்ற மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

துரோகம் செய்ய மாட்டார்கள்
முன்னதாக அங்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வைரலாகி இருந்தது. அதில் மூதாட்டி ஒருவர் செய்தியாளரிடம், "மோடியின் உப்பை தின்றுள்ளதால் அவருக்குத் துரோகம் செய்ய முடியாது" என்று பேசியிருந்தார். இதைக் குறிப்பிடும் வகையில் பேசிய பிரதமர், "மோடியின் உப்பைச் சாப்பிட்டோம். அவருக்குத் துரோகம் செய்ய மாட்டோம். என்பதுதான் உத்தரப் பிரதேச மக்களிடையே இப்போது பொதுவான பேச்சாக உள்ளது. எனவே, உபி மக்கள் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

வேக்சின்
ஆனால் நாம் அனைவரும் இந்த பாரத மாதாவின் உப்பைத் தான் சாப்பிட்டோம். ஏழைகளுக்கு உதவவும் அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தவும் நாங்கள் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறோம். கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட காலத்திலும் ஜாதி, மதம் என எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி போட்டோம்,. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இதனால் ஏழை மக்களுக்கு கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பாற்றல் பெற முடியாமல் போகிறது" என்று அவர் தெரிவித்தார்

அகிலேஷ் யாதவ்
தொடர்ந்து அகிலேஷ் யாதவை கடுமையாகத் தாக்கி பேசிய பிரதமர் மோடி, "சமாஜ்வாடி ஆட்சியில் சட்ட ஒழுங்கு எப்படி இருந்தது என அனைவருக்கும் தெரியும். ரவுடிகள் சுதந்திரமாக உலாவினார்கள். துப்பாக்கி போன்ற ஆயுதங்களைத் தைரியமாக வைத்துக் கொண்டு சூதாட்டம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்த "மாஃபியாவாதி" தான் இந்த சமாஜ்வாதி. அதிகாரத்தைப் பெற குடும்பத்திற்குள்ளேயே அவர்கள் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்

குடும்ப அரசியல்
ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்காக மட்டும் கட்சியை நடத்துபவர்களுக்கு மார்ச் 10இல் அனைத்து விடைகளும் கிடைக்கும். எதிர்க்கட்சிகள் இங்குச் சாதி ரீதியாக அரசியல் செய்ய முயல்கின்றனர். சாதி என்ற நச்சைப் பரப்பி மக்களைப் பிரிக்க முயல்கின்றனர். இவர்கள் எந்தவொரு சாதியினருக்கும் விசுவாசமாக இருப்பில்லை. மேலும், அவர்கள் சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் ஆபத்தான அரசியலை பின்பற்றுகின்றனர். இதனால் மத விழாக்களைக் கொண்டாடுவதை அவர்கள் தடுக்கிறார்கள்.

பொய்யான வாக்குறுதி
நான் கடந்த 2014 இல் பிரதமரான பிறகு உ.பி. மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என நினைத்தான். ஆனால் அதற்கு இங்கு ஆட்சியில் இருந்த சமாஜ்வாடி கட்சியினர் அனுமதிக்கவில்லை. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்குப் புரியும். சமாஜ்வாடி ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடியது. ஆனால், பாஜக ஆட்சியில் தான் இலவச எரிவாயு இணைப்பு, இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. மாநிலத்தைப் பல காலமாக இருளில் வைத்திருந்தவர்கள், இப்போது பொய்யான வாக்குறுதிகளை வழங்கத் தொடங்கி உள்ளனர்" என்று அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications