உடம்பெல்லாம் காயம்... யானை சிலை வைத்து வழிபாடு! உபியில் இஸ்லாமியரை தாக்கி நிலத்தை அபகரித்த பாஜகவினர்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர் மீது கொடூர தாக்குதலை நடத்தி அவரது நிலத்தில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள் யானை சிலை வைத்து வழிபாடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 2 வது முறையாக பாஜக வெற்றிபெற்று மீண்டும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்து இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள் மேலும் அதிகரித்து வருகின்றன.
சித்தார்த் நகர் மாவட்டம் டொமரியகஞ்ச் பகுதியில் உள்ள நிலம் தொடர்பாக முகமது இஸ்லாம் என்பவரது குடும்பத்தினருக்கும் பிரஜாபதி என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு இருந்து வந்திருக்கிறது. நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு முஹம்மது இஸ்லாம் குடும்பத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.

சர்ச்சைக்குரிய இடத்தில் யானை சிலை
இந்த நிலையில், சர்ச்சைக்குரிய இடத்துக்கு ராம்சரன் பிரஜாபதி, ஆக்யரம் யாதவ், கங்காராம் யாதவ் உள்ளிட்டோர் சென்று யானை சிலை வைத்து வழிபாடு நடத்தி இருக்கின்றனர். தனது நிலத்தை ஆக்கிரமிக்க நூற்றுக்கணக்கானவர்கள் வந்ததாக தெரிவித்துள்ள முகமது இஸ்லாம், அவர்களுடன் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ராகவேந்திர பிரதாப் சிங்கின் ஆதரவாளர்களும் உடன் இருந்ததாக கூறுகிறார்.

நிலத் தொடர்பாக தீர்ப்பு
தனது தந்தை, தாத்தா காலத்தில் இருந்தே இரண்டு குடும்பங்களுக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்ததாக கூறும் முகமது இஸ்லாம், அது தொடர்பான வழக்குகளில் நிலம் தங்களுடையது என்றே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக கூறுகிறார். ஆனால், 2019 ஆம் ஆண்டு முதல் மீண்டும் பிரஜாபதி குடும்பத்தினர் நிலம் தொடர்பாக தங்களிடம் தகராறு செய்து வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மதக்கலவரமாக மாற்ற சதி
இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான மோதலை இந்து - முஸ்லிம் கலவரமாக மாற்ற வலதுசாரி தலைவர்கள் முயற்சி செய்து வருவதாக அவர் கூறி இருக்கிறார். இது தொடர்பாக தனக்கு கொலை மிரட்டல்களும் அடிக்கடி வருவதாக முகமது இஸ்லாம் வேதனை தெரிவித்து உள்ளார். காவல் நிலையத்தில் தான் புகாரளிக்க சென்றபோது, போலீசார் சட்டமேலவை தேர்தலை காரணம் காட்டி ஏற்க மறுத்துவிட்டதாக அவர் கூறுகிறார்.

20 நிமிடம் கொடூர தாக்குதல்
இதனிடையே ஷாபுர் மண்டி பகுதியில் பணிக்காக சென்றபோது முகமது இஸ்லாமை சுற்றி வளைத்த ஆக்யாராம் யாதவ், கங்காராம் யாதவ், மணிஷ் அக்ரஹாரி உள்ளிட்ட 4 பேர் அவரை கொடூரமாக தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து 20 நிமிடங்கள் இடைவிடாமல் தன்னை கட்டைகளாலும், கால்களை கொண்டும் தாக்கியதாக தெரிவித்த முகமது இஸ்லாம் அவர்கள் தாக்கியதற்கான தழும்புகளும் உடம்பில் பதிந்துள்ளதாக வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications