உ.பி.: சமூக நீதியை நிலைநாட்ட ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவோம்- அகிலேஷ் யாதவ் உறுதி
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் வென்று சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைத்தால் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவோம் என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உறுதி அளித்துள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1931-ம் ஆண்டுதான் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு விடுதலை அடைந்த பிறகு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும் நடத்தப்படவில்லை.
உங்களால் எங்களுக்கு வேலை கிடக்கலை.. ஆத்திரத்தில் வடமாநில இளைஞரை கத்தியால் வெட்டிய 4 பேர் கைது
1931-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் மத்திய அரசு பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு அளிக்கும் மண்டல் ஆணைய பரிந்துரை வழங்கப்பட்டது. 1990களுக்குப் பின்னர் பல மாநிலங்களில் பல்வேறு வகையிலான இடஒதுக்கீடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசும் இடஒதுகீடு அறிவித்திருக்கிறது.
நீதிபதிகள் கருத்து
இது தொடர்பான பல வழக்குகளில், இடஒதுக்கீடு பெறும் சமுதாயத்தின் மக்கள் தொகை இடஒதுக்கீடு அளவுடன் குறிப்பிட்ட விகிதாசாரத்தில் இருக்கிறதா? என நீதிபதிகள் ஆராய்ந்து அதனடிப்படையில் தீர்ப்புகள் வழங்குகின்றனர். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் போது தலித்துகள், பழங்குடிகள் மக்கள் தொகை எண்ணிக்கை மட்டும் அறிவிக்கப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது.
நீண்டகால கோரிக்கை
ஏற்கனவே 2011-ல் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. ஆனால் அதில் பல குழப்பங்கள் இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. இதனால் அந்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி வருகின்றனர்.
பீகார் அனைத்து கட்சி குழு
பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தள் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோரும் இதனை வலியுறுத்துகின்றனர். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அம்மாநில அனைத்து கட்சிக் குழு பிரதமர் மோடியிடம் நேரில் வலியுறுத்தி இருந்தது. ஆனால் வழக்கு ஒன்றில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது; அதனால் குழப்பங்கள் ஏற்படும் என மத்திய அரசு கடந்த ஆண்டு தெரிவித்திருந்தது.
அகிலேஷ் வாக்குறுதி
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வென்றால், மாநில அரசே ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் என அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில், சமூக நீதியை நிலைநாட்ட ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவோம். உ.பி. பாஜக அரசு மரங்களை கணக்கெடுக்கிறது. விலங்குகளை கணக்கெடுக்கிறது. ஆனால் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் தொடர்பான கணக்கெடுப்பு நடத்த மறுக்கிறது. இப்போது தலித்துகள் வீடுகளில் உணவு சாப்பிடுகிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத். ஆனால் அந்த மக்களுக்கு ஷாம்பும் சோப்பும் அனுப்பியதை நாங்கள் மறக்கமாட்டோம் என்றார்.