"இதுதான் ஆபர்".. எடப்பாடி சொன்ன அந்த வார்த்தை! டெல்லி "தலை" சட்டென மதுரை வந்தது இதுக்கா! காவி குஷி
மதுரை: எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்திற்கும்.. ஜெபி நட்டாவின் மதுரை பயணத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக உட்கட்சி மோதல் உச்சத்தில் இருக்கும் நிலையில் திடீர் திருப்பமாக சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். சுமார் 20 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது.
அதிமுக பாஜக இடையே கடந்த சில வாரங்களாக மனஸ்தாபம் இருப்பதாக செய்திகள் வந்தன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
இதென்ன புதுக்கதை.. 'இடைத்தேர்தல்?’ - எடப்பாடி போடும் 'மாஸ்டர்' பிளான்.. க்ளூ கொடுத்த உதயகுமார்!
பொதுக்குழு
தற்போது அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று இருக்கிறார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை விட தேர்தல் ஆணையத்தின் முடிவுதான் முக்கியம். அதாவது எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்தது தொடர்பாகவும், கட்சி விதியில் செய்யப்பட்ட மாற்றம் தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்தில் அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. இதை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும்.
வழக்கு
இதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டால் எல்லாம் ஓவர். அதாவது உச்ச நீதிமன்றமே இதை மாற்ற முடியாது. தேர்தல் ஆணையம் பதவி மாற்றங்களை ஏற்றுக்கொண்டால் அதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுகொள்ளும். இந்த நிலையில்தான் தேர்தல் ஆணையத்தின் கரிசனத்தை பெறுவதற்காக எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. மத்திய பாஜகவின் ஆசி இருந்தால் தேர்தல் ஆணையத்தின் கரிசனத்தை பெறலாம் என்று அவர் நினைக்கிறார்.
தேர்தல் ஆணையம்
ஆனால் பாஜக - எடப்பாடி இடையே கடந்த சில நாட்களாக சுமுகமான உறவு இல்லை. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி - பாஜக இடையில் தற்போது சரியான உறவு இல்லை என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தினர்.முக்கியமாக பாஜக தன்னை எதிர்க்கட்சியாக முன்னிறுத்தியதை அதிமுக தரப்பும், எடப்பாடியும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஆன போது அதை பாஜக தலைவர்கள் யாரும் வாழ்த்தவில்லை.
உள்ளாட்சி தேர்தல்
கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் இரண்டு கட்சிகளின் கூட்டணி முறிந்தது. இதன்பின்பில் இருந்தே இரண்டு தரப்பு உறவு சரியாக இல்லை என்றே கூறப்படுகிறது. முக்கியமாக எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கையில், பல்வேறு பாஜக தலைவர்கள், தாங்கள்தான் எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொண்டு பல இடங்களில் பேட்டி கொடுத்தனர். அண்ணாமலையின் பேச்சும் சில இடங்களில் தாங்கள்தான் எதிர்க்கட்சி என்பது போலவே அமைந்து இருந்தது.
மோதல்
இந்த மோதல் காரணமாக டெல்லி கொஞ்சம் கொஞ்சமாக ஓ பன்னீர்செல்வம் பக்கம் சாய்ந்தது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி திடீரென டெல்லி சென்று டெல்லி பாஜக தலைகளுடன் சமரசம் செய்துள்ளார் என்கிறார்கள். திமுக பற்றி இதில் புகார் பட்டியலையும் அவர் வாசித்து இருக்கிறாராம். டெல்லியில் இருந்து தமிழ்நாடு ஆளும் தரப்பிற்கு எதிராக அழுத்தம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்து எடப்பாடி இந்த சந்திப்பில் பேசியதாக கூறப்படுகிறது. அவர்கள் பல டெண்டர்களை எடுக்கிறார்கள். அதை பற்றி விசாரிக்க ஆள் இல்லை. அதை உடனே விசாரிக்க வேண்டும், என்று கேட்டு இருக்கிறார்.
என்ன சொன்னார்?
இது போக வேறு ஒரு வார்த்தையையும் சொல்லி இருக்கிறாராம். அதன்படி , லோக்சபா தேர்தலில் இந்த முறை பாஜகவிற்கு கூடுதல் இடங்களை கொடுக்கிறோம் என்று கூறி இருக்கிறாராம். பாஜகவை சமாதானம் செய்து, டெல்லியின் கரிசனத்தை பெறுவதற்காக எடப்பாடி பழனிசாமி இந்த ஆபரை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் டெல்லியின் பார்வை தன் பக்கம் திரும்பும் என்று அவர் எதிர்பார்த்து இருக்கிறாராம். ஆனால் இதில் அமித் ஷா இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் தான் பாஜக தேசிய தலைவர் நட்டா திடீரென மதுரைக்கு வந்தார்.
மதுரை
மதுரையில் அவர் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது பற்றி பாஜக தலைவர்களிடம் பேசி இருக்கிறாராம். நாம் தனியாக போட்டியிட முடியாது. அதிமுகவுடன் கூட்டணிதான் வைக்க வேண்டும். ஆனால் இந்த முறை 15 எம்பி இடங்களையாவது கேட்க வேண்டும் என்று இந்த ஆலோசனையில் பேசப்பட்டு இருக்கிறதாம். லோக்சபா தேர்தலில் இந்த முறை பாஜகவிற்கு கூடுதல் இடங்களை கொடுக்கிறோம் என்று எடப்பாடி சொன்னதும் பாஜக தலைகள் நமக்கும் ஒரு சீட் கன்பார்ம் என்று ஏக குஷியில் இருக்கிறார்களாம்.