இரட்டை இலை சின்னம் கேட்டால் கையெழுத்து போடுவேன்..சசிகலாவை சந்திப்பேன்..ஓ.பன்னீர் செல்வம் உறுதி
சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என்று முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
மதுரை: இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை கேட்டு வந்தால் கையொப்பம் இடுவேன். இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும், தமிழக மக்களும் அதிமுக ஒன்றுபட வேண்டும் என விரும்புகிறார்கள் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் பலமுனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் படு பரபரப்பாக பிரச்சாரம் செய்து வருகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா தனது பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியும், ஓ.பன்னீர் செல்வம் அணியும் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். என்றாலும் பாஜக போட்டியிடுவதாக அறிவித்தால் வேட்பாளரை வாபஸ் பெறுவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறி வருகிறார்.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், மத்திய அரசின் பட்ஜெட் இந்தியாவை அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒரு பட்ஜெட்டாக உள்ளது. மத்திய பட்ஜெட்டின் சாராம்சங்களை தமிழக அரசு புரிந்து கொண்டு மக்களின் நலனுக்காக திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். பட்ஜெட்டின் விரிவான அறிக்கையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நம்பிக்கை உள்ளது.
தற்போது வரை அதிமுகவின் சட்ட விதிகளின் படி, ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் உள்ளோம். இருவருக்கும் 2026 ஆம் ஆண்டு வரை பதவி காலம் உள்ளது. இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை கேட்டு வந்தால் கையொப்பம் இடுவேன். இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன்.
அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும், தமிழக மக்களும், பாஜகவும் அதிமுக ஒன்றுபட வேண்டும் என விரும்புகிறார்கள். எங்கள் தரப்பில் தேசிய ஜனநாயக கூட்டணியின் படியே முறையாக அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு உள்ளேன். மீன்வளம், ஆய்வாளர்களின் கருத்துக்கள், சுற்றுப்புற சூழல் தொடர்பான கருத்துக்களை கேட்டு உள்ளேன். தமிழக அரசிடம் பதில் வந்தவுடன் எனது நிலைப்பாட்டை கூறுவேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் எடப்பாடிபழனிச்சாமி. அந்த மனு மீதான விசாரணை நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் அந்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி பதில் மனு ஒன்றை ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை கேட்டு வந்தால் கையொப்பம் இடுவேன் என்றும் இரட்டை இலை முடங்க தான் காரணமாக இருக்க மாட்டேன் என்றும் ஓ.பனனீர் செல்வம் தெரிவித்துள்ளார்.