அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசிய விவகாரம்.. விசாரணை வளையத்தில் மதுரை சரவணனின் உதவியாளர்!
மதுரை: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய விவகாரத்தில் முன்னாள் பாஜக மாவட்ட தலைவர் மருத்துவர் சரவணன் உதவியாளரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணமடைந்தார். கடந்த 13ம் தேதி மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்தினர்.

அப்போது விமானம் நிலையத்தில் இருந்து புறப்பட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் காரை வழிமறித்த பாஜகவினர், அவரது கார் மீது செருப்பை வீசினர். இந்த சம்பவத்தால் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் பிடிஆர் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் பாஜக மாவட்டத் தலைவராக இருந்த சரவணனின் தூண்டுதலின்பேரிலேயே காலணி வீசப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து முதல் தகவல் அறிக்கையில் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 10 பேரை போலீசார் கைது செய்த நிலையில், நள்ளிரவே சரவணன் பிடிஆரை சந்தித்து பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின்னர் அவரை போலீசார் கைது செய்யவில்லை. இந்த நிலையில் சரவணனையும் கைது செய்யக்கோரி மதுரை காவல் ஆணையரிடம் பாஜக சார்பில் புகாரளிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் பாஜகவின் முன்னாள் மாவட்ட தலைவர், மகளிர் அணி தலைவி என 10 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இன்று பாஜகவின் முன்னாள் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மருத்துவர் சரவணன் உதவியாளர் சுந்தரிடம் அவனியாபுரம் காவல்துறையினர், காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் மதுரை அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவில் மருத்துவர் சரவணன் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications