கொட்டித்தீர்த்த கனமழையால் மதுரையில் குளமான சாலைகள் - சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
மதுரை, தேனியில் அதிகாலையில் கொட்டித்தீர்த்த கனமழையால் மதுரை மாநகரின் சாலைகள் குளமாக மாறியுள்ளன. சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மதுரை: அதிகாலையில் கொட்டித்தீர்த்த கனமழையால் மதுரை மாநகரின் சாலைகள் குளம் போல மாறியுள்ளன. தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதிகளில் பெய்த தொடர் கன மழை எதிரொலியாக சுருளி அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழையும் இன்று பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கணித்தது போலவே மதுரையில் அதிகாலை முதலே பலத்த மழை கொட்டித்தீர்த்தது. ஆரப்பாளையம், கே. புதூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கருப்பாயூரணி சாலைகளில் வெள்ளம் தேங்கியதோடு குடியிருப்புகளுக்குள் வெள்ளம் சூழ்ந்தது. பேரையூரில் அதிகாலை 4 மணி முதல் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுருளி மலையில் கைலாசநாதர் கோயில், பூத நாராயணர் கோயில் உள்ளது. இங்குள்ள சுருளி அருவி தமிழ்நாட்டின் மிக முக்கிய அருவிகளில் ஒன்றாக விளங்குகிறது.
சுருளி அருவியில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து, சுருளி அருவியில் குளித்து நீராடி, முன்னோர்களுக்கு வழிபாடு செய்வார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுருளி அருவி மூடப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியுள்ள நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து தேனி மாவட்டத்தில் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டாலும் சுருளி அருவி வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் தற்போது வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
மாநிலம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலும் கடுமையான மழை பொழிவு கடந்த சில நாட்களாக இருந்து வந்த நிலையில், கேரளாவை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுருளி அருவிக்கு நீர்வரத்து வரும் தூவானம், மேகமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் தொடர் கனமழை பெய்துவரும் நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு காட்டாற்று வெள்ளம் போல் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இன்று காலையில் இருந்து சுருளி அருவிக்கு நீர்வரத்து வரும் வனப்பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையின் எதிரொலியாக சுருளி அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கனமழை காரணமாக மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாமக்கல், தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி வந்த 12 பேருக்கு ஓமிக்ரான் சோதனை.. 8 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்!