அதிமுக தொண்டர்களை விலை பேசும் ஓபிஎஸ்..தொலைந்து போன அரசியல் எதிர்காலம் - ஆர்.பி. உதயகுமார் சாடல்
மதுரை: மவுன யுத்தத்தில் இருந்து தற்போது தொண்டர்களை விலை பேசும் யுத்தத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கியுள்ளார் என்று ஆர்.பி. உதயகுமார் தெரிவித்திருக்கிறார். இன்று அதிமுக தொண்டர்களின் நம்பிக்கையை இழந்து, தனது அரசியல் எதிர்காலத்தை தொலைத்துவிட்டு பன்னீர்செல்வம் ஆதரவின்றி நிற்கிறார் என்றும் ஆர்.பி உதயகுமார் சாடியுள்ளார்.
அதிமுகவில் அண்ணன் தம்பிகளாக பழகியவர்கள் எல்லாம் இன்றைக்கு அடித்துக்கொண்டு நிற்கிறார்கள். ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது. ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு இடையேயான யுத்தத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி பின்னால் நிற்கிறார்கள். தென்மாவட்ட நிர்வாகிகளும் எடப்பாடி பழனிச்சாமியின் பின்னால் சென்றதை ஓ.பன்னீர் செல்வத்தினால் ஜீரணிக்க முடியவில்லை.
பொதுக்குழு வழக்கு தீர்ப்பு உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது. இருவரும் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் உறுதியாக கூறியுள்ளது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு.

ஆர்.பி. உதயகுமார்
இந்த நிலையில் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் ஓ.பன்னீர் செல்வம் விலைபேசி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் ஆர்.பி. உதயகுமார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், இந்தியாவிலேயே 3வது மாபெரும் இயக்கமாக இமயமென உயர்த்திய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு சொந்தமான வெற்றி வரலாறு இன்று சுயநலத்தால் ஏற்பட்டிருக்கின்ற விவாதங்கள் அனைத்தும் நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம்
இன்று அதிமுக தொண்டர்களின் நம்பிக்கையை இழந்து, தனது அரசியல் எதிர்காலத்தை தொலைத்துவிட்டு பன்னீர்செல்வம் ஆதரவின்றி நிற்கிறார். அதனை ஈடுகட்ட, தனக்கு செல்வாக்கு உள்ளதை போல காட்டிக்கொள்ள இதுவரை மவுன யுத்தத்தை நடத்தியவர்கள், தற்போது விலைபேசும் யுத்தத்தை தொடங்கியிருப்பதாக தொண்டர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர். தொலைத்துவிட்ட செல்வாக்கை மீண்டும் பெற தொண்டர்களை தவறாக எடைபோட்டு விடாதீர்கள்.

விலைபேசும் ஓபிஎஸ்
செல்வாக்கை உயர்த்திக்கொள்ளவும், செல்வாக்கு இருப்பது போன்று காட்டிக்கொள்ள வும் ஓ.பன்னீர்செல்வம் எடுத்துவரும் ஒவ்வொரு முயற்சியும் அவருக்கு பின்னடைவை தந்துக் கொண்டிருக்கிறது என்றார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களின் விஸ்வாசத்தை பதவி, பணம் என்று விலைபேசி, உண்மையான தொண்டர்களை வேதனை அடைய செய்துள்ளனர் எனவும் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

ஓபிஎஸ் vs ஆர்.பி உதயகுமார்
கடந்த சில வாரங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார், நான் தூய தொண்டாக இருந்து உழைத்து வருகிறேன். ஓ.பி.எஸ்.யின் வரலாறும், என் வரலாறும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்றாக தெரியும். நான் சொத்து சேர்த்துள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் மிரட்டி பார்க்க வேண்டாம் என்று கூறியிருந்தார். நான் கட்சி நலனுக்காகவும், எதிர்காலத்திற்காகவும் பேசி வருகிறேன். என்னை மிரட்டி பார்க்கும் ஓ.பி.எஸ். குறித்த பல உண்மைகளை வெளியிட்டால் ஓ.பி.எஸ். வெளியே தலை காட்ட முடியாத நிலை ஏற்படும் என்றும் பேட்டியளித்திருந்தார் ஆர்.பி. உதயகுமார். இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் அரசியல் எதிர்காலத்தை இழந்து நிற்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக தொண்டர்களின் நம்பிக்கையை இழந்து, தனது அரசியல் எதிர்காலத்தை தொலைத்துவிட்டு பன்னீர்செல்வம் ஆதரவின்றி நிற்கிறார் என்று ஆர்.பி உதயகுமார் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications