அண்ணா, கருணாநிதி, ஜெ., இருக்கும் போதே கட்சி தாவல் சாதாரணமப்பா.. தினகரன் கருத்து
Recommended Video
மதுரை: அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா போன்ற மூத்த அரசியல்வாதிகள் இருந்த காலத்திலேயே, கட்சி தாவல் சர்வசாதாரணமாக நடந்து இருக்கிறது என டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள தனியார் விடுதியில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் மூத்த அரசியல்வாதிகள் இருந்த காலத்திலேயே கட்சித் தாவல் நடந்துள்ளது. எனவே இது குறித்து பெரிதும் கவலைப்பட தேவையில்லை, தங்களது கட்சி நிர்வாகிகள் வேறு கட்சிக்கு செல்வதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறினார்.
மா.செ-க்களை தேர்வு செய்ய கூட்டம்
மேலும் பேசிய டிடிவி தேனி மாவட்ட நிர்வாகிகள் என்னை சந்திக்க வேண்டும் என்று அழைத்தார்கள். புதிய மாவட்ட செயலாளர்கள் தேர்ந்தெடுப்பதற்காக இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. நிர்வாகிகள் செல்வதால் எந்த ஒரு பாதிப்பும் எங்கள் கட்சிக்கு இல்லை. உண்மையான தொண்டர்கள் என்றும் எங்கள் பக்கம் இருப்பார்கள்.தேனி மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் 90 சதவீதத்திற்கும் மேல் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்துள்ளனர் என்றார்.
போர்க்கால நடவடிக்கை தேவை
தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை கடுமையாக நிலவி வருகிறது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வீட்டில் தண்ணீர் இல்லையென்றால் கொடுப்பார்கள். ஆனால் மக்களுக்கு தண்ணீர் கொடுக்க மாட்டார்கள். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து உடனடியாக மக்களின் குடிநீர்ப் பிரச்சனை அரசு சரி செய்ய வேண்டும்.
கட்சியின் பலம் குறையாது
நிர்வாகிகள் செல்வதால் ஒரு கட்சியின் பலம் குறையும் என்று நான் நினைக்கவில்லை. குடிநீர் பிரச்சினையை மறைப்பதற்காகத்தான் தங்கதமிழ்செல்வன் திமுக சென்றதை பூதாகரமாக அனைவரும் பேசி வருகின்றனர்.டெல்லியை கண்டு பயப்படுபவர்கள் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர மாட்டார்கள்.
திமுக அதிக தொகுதிகளில் வென்று இருப்பதால் பதவிக்காக சில பேர் திமுக சென்று கொண்டிருக்கின்றனர்.
சசிகலாவிற்கு எல்லாம் தெரியும்
கருணாநிதி,அண்ணா ஜெயலலிதா என தலைவர்கள் ஆட்சி காலத்திலேயே நிர்வாகிகள் கட்சி தாவும் முறை நடந்திருக்கிறது. சசிகலாவிற்கு நடப்பது எல்லாம் தெரியும், முக்கிய முடிவுகளை அவரிடம் கலந்தாலோசித்து தான் எடுக்கிறேன். பாராளுமன்றத்தில் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை இல்லை என்று ரவீந்திரநாத் குமார் பேசியதற்கு அவருக்கு வாக்களித்த தேனி மக்களும்,தமிழக மக்களும் தான் பதில் கூற வேண்டும். தங்கத்தமிழ் செல்வனை நேரில் அழைத்து பலமுறை ஊடகங்ளுக்கு தவறாக பேட்டி கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியும் தொடர்ந்து அவர் அதை செய்து வந்தார்.
தொடர்ந்து தவறான பேட்டி
கடந்த 20-ம் தேதி அவரை அழைத்து இந்த மாதிரி எல்லாம் பேட்டி கொடுக்க கூடாது தொடர்ந்து இப்படி நீங்கள் செய்து வந்தால் உங்களை பொறுப்பிலிருந்து நான் நீக்கி விடுவேன் என்று எச்சரித்தேன். அப்போதும் சரி சரி என்று சொல்லிவிட்டு, அடுத்தடுத்து அவர் ஒவ்வொரு ஊடகத்திற்கும் தொடர்ந்து தவறாக பேட்டியளித்தார். எதற்காக அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வந்தார் என்றே எங்களுக்கு தெரியவில்லை, அவர் அதிமுகவில் இருந்து இருக்கலாம் ஏன் எதற்காக வந்தார் என்று எங்களுக்கும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் தெரியவில்லை.
11 மணிக்கு மேலே அவர் வேற மாதிரி
பதவி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மிகவும் ஏழ்மையில் இருந்து வருகிறார்கள் என்று தங்கதமிழ்செல்வன் கூறிய கருத்திற்கு ,தங்க தமிழ்ச்செல்வன் இரவு பதினொரு மணிக்கு மேல் பேசினார அல்லது காலையில் பேசினாரா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.கடந்த 6 மாதமாக அவருடைய நடவடிக்கை சரியில்லை. அதிமுகவில் இணைவதற்கு ஓபிஎஸ் இடையூறாக இருப்பதால்தான் திமுகவில் தங்கதமிழ்செல்வன் இணைந்துள்ளார்.