ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக தொண்டர்கள் வெறுத்தது இதனால் தான்.. ராஜன் செல்லப்பா சொன்ன காரணம்!
மதுரை : எடப்பாடி பழனிசாமியை அதிமுக தொண்டர்கள் பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்கு அண்மையில் நடத்தப்பட்ட போராட்டங்களே சாட்சி என அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி பிரச்னை வந்தால் நீதிமன்றத்துக்கு செல்லக் கூடாது என விதி உள்ளது, விதியை மீறி ஓபிஎஸ் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார் என ராஜன் செல்லப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
திமுகவோடு கூட்டு வைத்ததால் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக தொண்டர்கள் வெறுத்துவிட்டனர் என்றும் ஈபிஎஸ் ஆதரவாளரான ராஜன் செல்லப்பா பேசியுள்ளார்.

இதுவே சாட்சி
மதுரை வண்டியூரில் அதிமுக சார்பில் பேறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏவும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான ராஜன் செல்லப்பா தலைமையேற்றுப் பேசினார். அப்போது பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமியை அதிமுக தொண்டர்கள் பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற சொத்து வரி, மின் கட்டண உயர்வுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களே அதற்கு சாட்சி." என்றார்.

ஓபிஎஸ்ஸை வெறுத்துவிட்டனர்
மேலும் பேசிய ராஜன் செல்லப்பா, "அதிமுக என்பது ஆலமரம். இரட்டை இலையோடு தலைமைக் கழகத்தோடு மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வருவார். திமுகவோடு கூட்டு வைத்ததால் ஓ.பன்னீர்செல்வத்தை தொண்டர்கள் வெறுத்துவிட்டனர். அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை வந்தால் நீதிமன்றத்துக்கு செல்லக்கூடாது என விதி உள்ளது. விதியை மீறி ஓபிஎஸ் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கிறோம். அதிமுகவில் விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும். அதிமுகவுக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும் வீறுகொண்டு எழுந்து செயல்படும். கட்சியில் இருந்து சிலர் மட்டுமே சென்றுள்ளனர். கட்சி உடையவில்லை.

எல்லாத்துக்கும் மூடுவிழா
தேர்தலில் கொடுத்த எந்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை. 2011ல் திமுக வீழ்ந்ததற்கு காரணம் மின்வெட்டு தான். சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வை செய்த திமுக அரசு விரைவில் பேருந்து கட்டணத்தையும் உயர்த்த உள்ளது. முதியோருக்கு நியாயமாக கொடுத்த முதியோர் உதவித்தொகை திட்டத்தை எதேதோ சொல்லி நிறுத்தி விட்டார்கள். அம்மா மினி கிளினிக்கை மூடியதால் அரசுக்கு என்ன லாபம் கிடைத்தது? அம்மா உணவகத்தில் மக்களுக்கு உணவு கொடுக்க சொன்னால் திமுகவினர் ஆம்லேட் போடுகின்றனர்.

புதிய திட்டங்கள் உள்ளதா
ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட உன்னதமான திட்டமான தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக நிறுத்தி விட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நல திட்டங்களை திமுக நிறுத்தி வருகிறது. கருணாநிதி பெயரால் திறக்கப்படும் நூலகத்தால் யாருக்கு பயன் கிடைக்கப் போகிறது? அதிமுக ஆட்சி காலத்தில் மதுரையில் டைடல் பார்க் அமைக்க அவனியாபுரத்தில் 13 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டி திறக்கப்பட்ட திட்டங்கள் ஏதும் உள்ளதா?

கடனில் தத்தளிக்கும் அரசு
தமிழக அரசின் தற்போதைய கடன் தொகை ஒன்றரை லட்சம் கோடியாக உள்ளது. தமிழக அரசு கடனில் தத்தளித்து வருகிறது. திமுக கொண்டு வந்தது காலை உணவு திட்டம் அல்ல உப்புமா திட்டம். இதன் மூலம் மதிய உணவு திட்டத்தை மூட திட்டமிட்டுள்ளனர். அம்மா உணவகத்தை மூட இதை திட்டமிட்டு செய்துள்ளனர். திமுக அரசில் திட்டங்கள் அனைத்தும் அறிவிப்போடு தான் உள்ளன. இன்னும் அரசாணை வெளியிடவில்லை.

40க்கு 40 - வாய்ப்பே இல்ல
திமுக கூட்டணி கட்சிகள் ஒவ்வொரு திசையில் இருப்பதால் திமுக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது. திமுகவுக்கு 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி எங்கிருந்து வரும். எல்லா பொருட்களின் விலையையும் உயர்த்திவிட்டால் எப்படி 40க்கு 40 வரும். தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து விட்டது. திமுக ஸ்டாலின் அரசில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது." என விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications