கொரோனா சமயத்தில் சர்ச்சை டுவிட்.. ‛தேஷ்துரோகி’ பட நடிகர் கமல் ஆர்.கான் 2 ஆண்டுக்கு பின் கைது!
மும்பை: கொரோனா சமயத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட சர்ச்சை டுவிட்டர் பதிவு தொடர்பான வழக்கில் துபாயில் இருந்து விமானத்தில் திரும்பிய இந்தி நடிகர் கமல் ஆர்.கானை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தி திரைத்துறையை சேர்ந்தவர் கமல் ரஷித் கான். நடிகரான இவர் கேஆர்கே என அழைக்கப்பட்டு வருகிறார். இவர் பாலிவுட் திரைத்துறை, நடிகர்கள் பற்றி கருத்துகள் கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இவர் ‛தேஷ்துரோகி' என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். மேலும் இவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.

சர்ச்சை நடிகர்
இந்த யூடியூப் சேனலில் கமல் ரஷித் கான் திரைப்படங்களை விமர்சனம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும் சமூக வலைதளங்களிலும் திரைப்படம் பற்றியும், நடிகர்கள் குறித்தும் கருத்து தெரிவித்து வருகிறார். இவர் பிரதமர் நரேந்திர மோடி பற்றியும் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். அதாவது பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கை அமெரிக்க வெள்ளை மாளிகை பின்பற்றுவதை நிறுத்தியது பற்றி கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார்.

நடிகர்கள் பற்றி சர்ச்சை
இதற்கிடையே கடந்த 2020ம்ஆண்டு கொரோனா பரவிய சமயத்தில் மறைந்த நடிகர்கள் ரிஷி கபூர், இர்பான் ஆகியோர் பற்றி கமல் ரஷித் கான் சர்ச்சைக்குரிய வகையில் டுவிட்டரில் கருத்துகள் தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக யுவ சேனா அமைப்பின் உறுப்பினர் ராகுல் கணல் என்பவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மலட் பகுதி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கமல் ரஷித் கான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

லுக்அவுட் நோட்டீஸ்
அதன்படி கமல் ரஷித் கான் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு விமான நிலையங்களில் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் துபாயில் இருந்து விமானம் மூலம் கமல் ரஷித் கான் நேற்று இரவு மும்பைக்கு வந்தார்.

2 ஆண்டுக்கு பின் கைது
இதுபற்றி அறிந்த மலட் போலீசார் விமான நிலையத்தில் கமல் ரஷித் கானை கைது செய்தனர். 2020ம் ஆண்டு செய்த டுவிட்டர் பதிவால் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இன்று கமல் ரஷித் கானை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications