மோடிக்கு ஒரு போன் கால்.. தப்பித்தது உத்தவ் தாக்ரே முதல்வர் பதவி.. மே 21ல் நடக்கிறது மேலவை தேர்தல்
மும்பை: மகாராஷ்டிரா மேலவைக்கு மே 21ஆம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது இதன்மூலம் அந்த மாநிலத்தில் நிலவி வந்த அரசியல் சாசன இக்கட்டு முடிவுக்கு வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
மகாராஷ்டிராவில், பாஜக, சிவசேனா ஆகியவை ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மற்றொரு கூட்டணியாகவும் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின்போது களம் கண்டன.
இதில், பாஜக, சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இருப்பினும், எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் முதல்வர் பதவியை தங்களுக்கு தர வேண்டும் என்று சிவசேனா போர்க்கொடி உயர்த்தியது.
கூட்டணி
இதற்கு பாஜக சம்மதிக்கவில்லை என்பதால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலுக்குப் பிந்தைய ஒரு கூட்டணி ஏற்படுத்தப்பட்டது. சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வர் ஆக்கப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
ரூல்ஸ் இதுதான்
முதல்வராகவோ, அமைச்சராகவோ பதவியேற்ற ஒருவர், எம்எல்ஏ அல்லது எம்எல்சி என்ற பதவியில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் முதல்வராக பொறுப்பேற்ற 6 மாத காலத்திற்குள், இதில் இரண்டில் ஒரு பதவியை அவர் பெற வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக, மேலவை தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை நிலவியது.
அரசியல் சாசன சிக்கல்
எனவே, அரசியல் சாசன சிக்கல் எழுந்தது. முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் பதவியேற்க வேண்டும். முதல்வர் ராஜினாமா செய்தால் மொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்ததாக அர்த்தம். எனவே, மொத்த அமைச்சரவையும் மீண்டும் பதவியேற்க வேண்டும்.
முடிவெடுக்காத ஆளுநர்
அல்லது, நியமன உறுப்பினர் என்ற அந்தஸ்தை ஆளுநர் நினைத்தால் உத்தவ் தாக்கரேவுக்கு கொடுக்கமுடியும். ஆளுநரால் நியமிக்கப்படக் கூடிய மேலவை நியமன உறுப்பினராக உத்தவ் தாக்ரேவை நியமிக்க வேண்டும் என்று அமைச்சரவையை கூட்டி முடிவெடுத்தது அரசு. ஆனால், ஆளுநர் பகத்சிங் கோஷாரி எந்த முடிவும் எடுக்கவில்லை.
மோடிக்கு போன்
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார் உத்தவ் தாக்கரே. மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் ஸ்திரத் தன்மையை சீர்குலைக்க முயற்சிகள் நடப்பதாக அப்போது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஆளுநர் கோஷ்யாரி கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், லாக்டவுன் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதன் அடிப்படையில் மகாராஷ்டிராவில் சட்ட மேலவை தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தலாம் என்று கேட்டுக் கொண்டார்.
மே 21ல் தேர்தல்
இதையடுத்து, இன்று, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 21ம் தேதி காலியாக உள்ள 9 எம்எல்சி பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படவேண்டும். கொரோனா வைரஸ் பிரச்சினை இருப்பதால் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த தேர்தல் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவித்து உள்ளது. இதன் மூலம் பதவியை ராஜினாமா செய்யாமலேயே அரசியல் சாசன பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் உத்தவ் தாக்கரே என்றுதான் கூறவேண்டும்.