மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் நானா பட்டோலி ராஜினாமா
மும்பை : மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் நானா பட்டோலி தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். அவர் ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகர் நர்ஹர் ஜிர்வாலிடம் ஒப்படைத்தார். பட்டோலி, மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட உள்ளார்.
2 நாட்களுக்கு முன் டில்லி சென்ற பட்டோலி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். பட்டோலியின் பெயர் மாநில தலைவர் பெயருக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் பெயர்களில் முன்னணியில் இருந்ததை அடுத்து, கட்சி தலைமையிடம் இருந்து அவருக்கு அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது.
காங்கிரசில் இருந்த பட்டோலி, பிறகு பாஜக.,வில் இணைந்து 2014 ல் பந்தாராகோண்டியா பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு மீண்டும் காங்கிரசிற்கு திரும்பிய அவருக்கு, கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றதால், மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது.
தற்போது மீண்டும் அவருக்கு ஒரு முக்கிய பதவியை வழங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.