கலவரம் செய்ய விரும்பல.. மதம் பெரிதல்ல.. மசூதிகளில் ஸ்பீக்கரை நீக்குங்க.. ராஜ்தாக்கரே பரபரப்பு பேச்சு
மும்பை:‛‛மகாராஷ்டிராவில் கலவரம் செய்ய விரும்பவில்லை. மாறாக மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்தினால் நாங்களும் பயன்படுத்துவோம். மேலும் சட்டத்தை விட மதம் ஒன்றும் பெரிது கிடையாது என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்''என மகாராஷ்டிரா நவநிர்மான சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே கூறினார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துகின்றன. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார்.
இந்நிலையில் தான் மகாராஷ்டிராவில் உள்ள மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என இந்துத்துவ அமைப்பினர் கூறி வருகின்றனர். இதற்கு ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மான சேனா தான் பிள்ளையார் சுழி போட்டது.
எங்களை இந்தி பேச சொல்ல நீங்கள் யார்? உங்கள் அஜெண்டா என்ன?.. அமித்ஷாவுக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி
ராஜ்தாக்கரே கூறியது என்ன
அதாவது இந்த மாத துவக்கத்தில் மகாராஷ்டிர நவநிர்மான சேனா (எம்என்எஸ்) தலைவரான ராஜ்தாக்கரே பேசுகையில், ‛‛மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அதிக ஒலியில் ஒலிக்கப்படுகின்றன. இதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அனுமன் பாடல்கள் அதிக ஒலியில் ஒலிக்கப்படும்'' என கூறியிருந்தார். இதையடுத்து தான் மகாராஷ்டிராவில் உள்ள மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதில் அந்த மாநில அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
2 பேர் கைது
இதனால் ஏப்ரல் 10ல் ராம நவமி விழாவையொட்டி மும்பை தாதரில் உள்ள சிவசேனா பவனுக்கு எதிரே எம்என்எஸ் கட்சி கொடியுடன் டாக்சியில், அனுமான் சாலிசா பாடல் அதிக சத்தத்துடன் ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதுதொடர்பாக எம்என்எஸ் தலைவர் யஷ்வந்த் கில்லேடர், டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டனர்.
சட்டத்தை விட மதம் பெரிதல்ல
இந்நிலையில் இதுபற்றி இன்றும் ராஜ்தாக்கரே பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‛‛மசூதிகளில் தொழுகையை எதிர்க்கவில்லை. அங்கு ஒலிபெருக்கி பயன்படுத்தினால், நாங்களும் ஒலிபெருக்கிகளையும் பயன்படுத்துவோம். சட்டத்தை விட மதம் பெரிதல்ல என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். நானும் எனது அமைப்பும் மகாராஷ்டிராவில் எந்த கலவரத்தையும் விரும்பவில்லை. மே 2ம் தேதிக்குள் மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மே 3ல் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவிப்பேன்'' என்றார்.
சஞ்சய் ராவத் விமர்சனம்
முன்னதாக மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் செயலை சிவசேனா கட்சியின் எம்பி சஞ்சய் ராவத் விமர்சனம் செய்திருந்தார். அதில், ‛‛மசூதிகளுக்கு வெளியே பிரச்சனை செய்து சிலர் வன்முறையை ஏற்படுத்துகின்றனர். இது இந்துத்துவா அல்ல. '' என மறைமுகமாக ராஜ்தாக்கரேவை விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.