வாரிசுக்கு வழிவிட்ட முகேஷ் அம்பானி.. ரிலையன்ஸ் ”ஜியோ” நிறுவன இயக்குநர் பதவியிலிருந்து விலகல்
மும்பை: இந்தியாவின் தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து முகேஷ் அம்பானி விலகியதை தொடர்ந்து அவரது மகன் ஆகாஷ் அம்பானி இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜியோ என்ற பெயரில் தொலைதொடர்பு நிறுவனத்தை தொடங்கி குறைந்த கட்டணத்தில் கால் மற்றும் இணையதள சேவைகளை வழங்கியது.
குறைந்த கட்டணம் காரணமாக மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களின் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு எண்களை மாற்றினார்கள்.
ஜியோவின் வளர்ச்சி
ஒரு கட்டத்தில் இந்தியாவின் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக உருவெடுத்த ஜியோ, அடுத்தடுத்த ஆண்டுகளில் கால் மற்றும் இணையதள கட்டணங்களை உயர்த்தத் தொடங்கியது. இந்தியாவின் நம்பர் 1 தொலைதொடர்பு நிறுவனமாக திகழ்ந்து வரும் ஜியோவின் இயக்குநராக முகேஷ் அம்பானி பதவி வகித்து வந்தார்.
முகேஷ் அம்பானி விலகல்
இந்த நிலையில் நேற்று ஜியோ நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. அதில், முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் பதவியிலிருந்து விலகினார். இதனை அடுத்து முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாகமற்ற இயக்குநராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இனி இவர்தான் எல்லாம்
அத்துடன் ஜியோ நிறுவனத்துடைய நிர்வாக இயக்குநராக பங்கஜ் மோகன் பவார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இனி ஜியோ நிறுவனத்தின் முக்கிய செயல்பாடுகள், முடிவுகள், திட்டங்கள் அனைத்தும் இவரது கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. நிறுவனத்தின் கூடுதல் சுயாதீன இயக்குநர்களாக ரமிந்தர் சிங் குஜ்ரால் மற்றும் கே.வி.சவுதாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.
பதவிகாலம்
நிர்வாக இயக்குநர் மற்றும் கூடுதல் இயக்குநர்களின் பதவிகாலம் 5 ஆண்டுகளாகும். 5 ஆண்டுகள் கழித்து நடைபெறும் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி, தனது நிறுவன பொறுப்புகளை பிள்ளைகளிடம் வழங்கப்போவதாக தெரிவித்தார். தன்னுடைய தந்தை திருபாய் அம்பானியின் திறமை தன்னுடைய பிள்ளைகளிடம் இருப்பதாக அவர் கூறினார்.
ஜியோவின் பங்கு மதிப்பு
ஜியோ நிறுவனங்கள் அனைத்தும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்கும் வருகின்றன. மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு ரூ.2,529.00 ஆகவும், தேசிய பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீன் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு ரூ.2,530 ஆகவும் உள்ளது.