பரோட்டாவும்-சப்பாத்தியும் வெவ்வேறானவை! பரோட்டாவுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி செல்லும்... ஏஏஏஆர் உறுதி
மும்பை: பரோட்டோவுக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி செல்லும் என ஜிஎஸ்டி வரி விவகார மேல்முறையீட்டு தீர்ப்பாயமான ஏஏஏஆர் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
மேலும் சப்பாத்தி, ரொட்டி, பரோட்டா ஆகியவை வெவ்வேறானவை தான். இதனை ஒரே ரகமாக கருத முடியாது எனக்கூறிய குஜராத் ஏஏஆர் வழங்கிய தீர்ப்பை ஜிஎஸ்டி வரி விவகார மேல்முறையீட்டு தீர்ப்பாயமான ஏஏஏஆர் உறுதி செய்துள்ளது.
இந்த வழக்கின் சாராம்சம் என்ன? பரோட்டாவுக்கு மட்டும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் பிரச்சனை கிளம்பியது எப்படி என்பது தொடர்பான விபரம் வருமாறு:
ஜிஎஸ்டி வசூல்: கடந்த ஆண்டை விட 26% அதிகம்..நிர்மலா சீதாராமன் பெருமிதம்.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவா
ஜிஎஸ்டி தொடர்பான பிரச்சனை
இந்தியாவில் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி என்பது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இந்தியாவில் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது முதல் அதுதொடர்பாக ஏதாவது பிரச்சனை கிளம்பி தான் வருகிறது.
குஜராத் தீர்ப்பாயத்தில் முறையீடு
அந்த வகையில் தான் சமீபத்தில் ஒரு பிரச்சனை எழுந்தது. அதாவது மத்திய அரசு சார்பில் ரொட்டி, சப்பாத்தி, நான் வகைகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரியும், பரோட்டாவுக்கு 18 சதவீத வரியும் விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆமதாபாத்தில் உள்ள வாடிலால் இண்டஸ்ட்ரீஸ் சார்பில் குஜராத்தில் உள்ள ஜிஎஸ்டி வரி விவகார தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது.
18 சதவீத ஜிஎஸ்டி வரி சரிதான்
இதனை விசாரித்த தீர்ப்பாயம் பரோட்டாவுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டது சரி தான் என உத்தரவிட்டது. அப்போது "சப்பாத்தி, ரொட்டி, பரோட்டா என்பது வெவ்வேறானவை தான். ரெடி டூ இட் வகையிலான உணவுகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், ரெடிமேடாக வாங்கி சமைக்கப்படும் உணவுகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் பாக்கெட்டுகளில் வாங்கும் பரோட்டாவை குறைந்தபட்சமாக சில நிமிடங்களாவது சமைக்க வேண்டும். இதனால் பரோட்டாவுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி செல்லும். மாறாக ரொட்டி, நான், காக்ரா போன்வற்றை கடைகளில் வாங்கியவுடன்அப்படியே சாப்பிட முடியும். இதனால் பரோட்டா ரொட்டி வகையுடன் சேராது " என உத்தரவு பிறப்பித்தது.
மேல்முறையீட்டு மனு
இதையடுத்து அந்த அமைப்பு சார்பில் ஜிஎஸ்டி வரி விவகார மேல்முறையீட்டு தீர்ப்பாயமான ஏஏஏஆரில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதாவது சப்பாத்தி-பரோட்டா ஆகியவற்றை வெவ்வேறானவை என கூறியதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் சாதாரண பரோட்டா வெறும் கோதுமை மாவு, தண்ணீரால் தான் தயாரிக்கப்படுகிறது. பிற பரோட்டோக்களின் பயன்படுத்தப்படும் காய்கறிகள் சுவை கூட்டுவதற்கு மட்டுமே. இதனால் பரோட்டோ-சப்பாத்தியை ஒன்றாக கருத வேண்டும் என கோரப்பட்டது. இதனை விசாரித்த தீர்ப்பாயம், குஜராத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது உத்தரவிட்டது.
உத்தரவை உறுதி செய்த தீர்ப்பாயம்
இந்த தீர்ப்பின்போது, "மனுதாரரின் உணவு நிறுவனம் 8 வகை பரோட்டாக்களை விற்கிறது. மலபார் , மிக்ஸ்டு வெஜிடபிள், ஆனியன், மெதி, ஆலு, லச்சா, மூளி, ப்ளைன் உள்ளிட்ட பரோட்டா வகைகளை தயாரிக்கிறது. பரோட்டாவின் மூலப்பொருட்களாக கோதுமை மாவு, வெங்காயம், காய்கறி, உருளைக்கிழங்கு, மேதி உள்ளிட்டவை உள்ளன. கடைகளில் விற்கப்படும் பரோட்டாக்களை வாங்கிய பிறகு 3 அல்லது 4 நிமிடங்கள் சூடு செய்யப்பட வேண்டும். ஆனால், ரொட்டி, சப்பாத்தி போன்றவை நன்கு சமைக்கப்பட்டவை. அதனை அப்படியே சாப்பிட முடியும். இவை நன்கு சமைக்கப்பட்ட உணவு. ஆனால் பரோட்டா என்பது பகுதியாக சமைக்கப்பட்ட உணவு. பாக்கெட்டுகளில் வாங்கிய பிறகு பரோட்டோவை மீண்டும் சில நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும். இதனால் சப்பாத்திக்கும், பரோட்டோவுக்கும் வேறுபாடு உள்ளது. எனவே சப்பாத்தி, ரொட்டி வகையில் பரோட்டாவை சேர்க்க முடியாது'' என உத்தரவிட்டது.