ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதை பொருள் வழக்கு பின்னணியில் பாஜக சதி: நவாப் மாலிக் வெளியிட்ட வீடியோ
மும்பை: நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னணியில் பாஜக சதி உள்ளது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், மகாராஷ்டிரா மாநில அமைச்சருமான நவாப் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து, கோவா செல்லும் சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்துவதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாகவும், எனவே, அந்த கப்பலில் சாதாரணப் பயணிகளை போல சென்று கண்காணித்த போது, தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்ததாகவும், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். மேலும் 8 பேரை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

ஷாருக் கான் மகன்
இதில் ஒருவர் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் ஆகும். எனவே இந்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரம், பாரதிய ஜனதா கட்சியால் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பான நார்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோ (என்.சி.பி) தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மஹாராஷ்டிர அமைச்சருமான நவாப் மலிக் குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜக பிரமுகர் ஏன் செல்கிறார்
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், மும்பை கடற்கரையோரம் சொகுசுக் கப்பலில் கைது செய்யப்பட்டவர்கள், நார்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோ அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்படும் வீடியோவில், ஆர்யன் கானுடன் அலுவலகத்துக்குள் ஒரு தனியார் டிடெக்டிவ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மணீஷ் பானுஷாலி செல்கிறார்கள். தனியார் டிடெக்டிவ் பெயர் கே.பி. கோஸ்வாமி.
Recommended Video

கேள்விகள்
செப்டம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் மணீஷ் பானுஷாலி குஜராத் அமைச்சர்கள் சிலரை சந்தித்துள்ளார். 21ம் தேதி அதானி நிறுவனம் இயக்கும் முந்த்ரா துறைமுகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆப்கானிஸ்தான் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. 28ம் தேதி மீண்டும் குஜராத் சென்ற பானுஷாலி குஜராத்தில் ராணா என்ற அமைச்சரைச் சந்தித்துள்ளார். பின்பு அக்டோபர் 3ம் தேதி மும்பை கப்பல் கைது நடவடிக்கையில் எப்படி அவர் கலந்துகொண்டார்.

ஷாருக் கான்தான் குறி
சொகுசுக் கப்பலிலோ, துறைமுகத்தின் கப்பல் முனையத்திலோ போதைப்பொருள் கைப்பற்றப்படவில்லை. என்.சி.பி வெளியிட்டுள்ள காணொளி, அந்த அமைப்பின் மண்டல அலுவலகத்தில் எடுக்கப்பட்டது. எனவே கப்பலில் போதை மருந்து கைப்பற்றப்பட்டதாக கூறுவது நாடகம். ஷாருக் கான்தான் தங்கள் அடுத்த குறி என்று, போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே கூறி வந்ததை நினைவு கூற விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
|
வெளியிட்ட வீடியோ
போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரி அளித்த பேட்டியில் 8 முதல் 10 பேர் வரை கைது செய்துள்ளோம் என்று முதலில் கூறினார். இவர்கள் உண்மையிலேயே கைது செய்திருந்தால் எண்ணிக்கை குறித்து ஏன் தடுமாறினார்கள் என்றும் நவாப் மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பாஜக பிரமுகர் போதை மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் சென்ற வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதேநேரம், வழக்கில் சாட்சிகளாக அவர்கள் சேர்க்கப்பட்டிருப்பதால் அலுவலகத்திற்கு வந்து சென்றார்கள் என்று போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications