மிசா காலத்திலேயே காங். கூட்டாளி சிவசேனாவை பாஜக பக்கம் தள்ளிவிட்ட பவார்.. மகா. பிளாஷ் பேக்!
மும்பை: மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பதில் பெரும் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. தற்போது சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க தயங்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்தான் 1980களில் சிவசேனாவை பாஜக பக்கமே தள்ளிவிட்டார் என்பது வரலாறு.
மகாராஷ்டிராவில் மண்ணின் மைந்தர்கள் கொள்கையை முன்வைத்து 1960களில் உருவானது சிவசேனா. இந்த கட்சியானது 1971ல் இந்திரா காந்திக்கு எதிரான காங்கிரஸ்(ஓ) அணியுடன் கூட்டணி அமைத்தது. அத்தேர்தலில் 3 இடங்களில் போட்டியிட்ட சிவசேனா வெற்றி பெறவில்லை.
1975-ம் ஆண்டு இந்திரா காந்தி எமர்ஜென்சியை அறிவித்த போது அதை ஆதரித்தது சிவசேனா. அத்துடன் 1977-ம் ஆண்டு இந்திராவின் காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா கூட்டணி அமைத்தது.
இந்திராவுடன் கூட்டணி
இத்தனைக்கும் அப்போது ஜனசங்கம், ஜனதா கட்சி என மெகா கூட்டணி இருந்தது. வாஜ்பாய், அத்வானி என பெரும் தலைவர்கள் இருந்தனர். ஆனால் பால்தாக்கரே தேர்வு செய்தது இந்திரா காந்தி கூட்டணியைத்தான்.
சிவசேனா- முஸ்லிம் லீக்
இதற்கு அடுத்து இன்று முஸ்லீம்களின் பரம எதிரியாக முன்வைக்கப்படுகிற சிவசேனா, 1979-ல் மும்பை மாநகராட்சி தேர்தலில் அன்றைய இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பனத்வாலாவுடன் கைகோர்த்தார். அத்தேர்தலில் இரு தலைவர்களும் இணைந்து பிரசாரம் செய்தனர். ஆனால் இரு கட்சிகளிடையே கூட்டணி அமையவில்லை.
காங்கிரஸுக்கு சிவசேனா ஆதரவு
1980 மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியைத்தான் சிவசேனா ஆதரித்தது. அப்போதைய முதல்வர் ஏ.ஆர். அந்துலேவுக்கு இணையான அந்தஸ்து கொண்டவராக பால்தாக்கரே உருவெடுத்திருந்தார். பின்னர் பாஜக உருவானது. அப்போதும் சிவசேனா அந்த பக்கம் போகவில்லை. அதன் பின்னர் காங்கிரஸுக்கும் சிவசேனாவுக்கும் முரண்பாடுகள் எழுகின்றன.
பாஜக பக்கம் தள்ளிவிட்ட பவார்
அந்த காலகட்டத்தில் காங்கிரஸுக்கு எதிராக தனி ஆவர்த்தனம் வாசித்துக் கொண்டிருந்தவர் இன்றைய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார். அவர் 1984 லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மெகா கூட்டணியை சரத்பவார் உருவாக்கினார். அந்த கூட்டணியில் சிவசேனாவுக்கு இடம் மறுக்கப்பட்டது.
பாஜக கூட்டணியில் சீனியர் சிவசேனா
இதனால் வேறுவழியே இல்லாமல் அப்போதுதான் உதயமான பாஜகவுடன் சிவசேனா கைகோர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அன்று தொடங்கி தற்போதைய தேர்தல் வரை சிவசேனா- பாஜக கூட்டணியில் சிவசேனாதான் சீனியர் கட்சி. ஆனால் தற்போதைய தேர்தலில்தான் பாஜகவுக்கு அதிக இடங்களை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது சிவசேனா.
அதனால்தான் அதிகாரப் பகிர்வில் அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது சிவசேனா.