சிகிச்சை வேண்டாம்.. இறந்து விடுவேன்.. ஜாமீனில் விடுவிக்கணும்.. பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமி வேண்டுகோள்!
மும்பை: மருத்துவமனை சிகிச்சைக்கு சென்றால் இறந்து விடுவேன். ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமி மும்பை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆங்கிலேயர்களுக்கும் மராத்தியர்களுக்கும் இடையிலான போரின் 200வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி மகாராஷ்டிராவின் பீமா கோரேகானில் 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது மிகப் பெரும் வன்முறை வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.
நாட்டில் கொரோனா குறைய தொடங்கினாலும்.. தமிழகம் உட்பட 7 மாநிலங்களின் நிலை மிக மோசம்.. மத்திய அரசு
இந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) சமூக செயற்பாட்டாளர்களான வரவர ராவ், ஆனந்த் டெல்டும்ப்டே உள்ளிட்ட ஏராளமானோரை கைது செய்தது. இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டை சேர்ந்த பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
உடல்நிலை மோசம்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக செயல்பட்டு வந்த 84 வயதான ஸ்டேன் ஸ்வாமி கைது செய்யப்பட்டு மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. சிறையில் ஸ்டேன் ஸ்வாமியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கபட்டது.இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமியின் உடல்நிலையை ஆய்வு செய்ய ஒரு மருத்துவர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் மும்பை ஜேஜே மருத்துவமனைக்கு ஸ்டேன் ஸ்வாமியை பரிசோதனைக்காக அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டது.
உடலில் நடுக்கம்
உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க ஸ்டேன் சுவாமியை பரிசோதித்த மும்பையின் ஜே.ஜே மருத்துவமனையில் இருந்து சிறை அதிகாரிகள் மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்தனர். அதில், ' சுவாமி இரு காதுகளிலும் தீவிர செவித்திறன் இழப்புக்கு ஆளாகியுள்ளார். அவரது உடல், கால்களில் நடுக்கம் ஏற்பட்டது. எனவே வாக்கிங் ஸ்டிக் அல்லது சக்கர நாற்காலி வடிவில் அவருக்கு உதவி தேவைப்படுகிறது. ஆனாலும் அவரது இதய துடிப்பு விகிதம் சீராக உள்ளது என்று கூறியது.
சிகிச்சை வேண்டாம்
இதனை தொடர்ந்து ஸ்டேன் சுவாமி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பொது சிகிச்சைக்காக ஜே.ஜே மருத்துவமனையில் சேர விரும்புகிறாரா என்று பெஞ்ச் கேட்டது. ''ஜே.ஜே. மருத்துவமனை எனக்கு என்ன மருந்துகளைத் தரும்? நான் இரண்டு முறை அங்கு வந்திருக்கிறேன். அங்குள்ள அமைப்பு எனக்குத் தெரியும். நான் அங்கு செல்ல விரும்பவில்லை" என்று ஸ்டேன் சுவாமி தெரிவித்தார்.
ஜாமீன் வழங்க வேண்டும்
"நான் மிகவும் கஷ்டப்படுவேன், இறக்க கூட நேரிடும். என் நண்பர்களுடன் ராஞ்சியில் இருப்பேன். சிகிச்சைக்கு பதிலாக எனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட வேண்டும்'' என்று ஸ்டேன் சுவாமி கூறினார். அதற்கு நீதிபதிகள் ''நீதிமன்றம் உங்களை மருத்துவமனையில் அனுமதிப்பது குறித்தும்தான் விசாரிக்கிறது. ஜாமீன் மனு அல்ல'' என்று கூறினார்கள்.
நீதிமன்றம் உத்தரவு
அவருடைய பிரச்சினைகள் வயது தொடர்பானவை மட்டுமே என்று அவருக்குத் தெரியும். அதனால்தான் அவர் இடைக்கால ஜாமீனுக்காக மட்டுமே அழுத்தம் கொடுக்கிறார் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். சிறையில் இருக்கும்போது சுவாமிக்கு சுகாதார வசதிகள் மற்றும் சிகிச்சைகள் வழங்குவது குறித்து ஜே.ஜே மருத்துவமனை அளித்த அனைத்து பரிந்துரைகளையும் பின்பற்றுமாறு தலோஜா சிறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.