பாரத் ஜோடோ யாத்திரை.. ராகுல் காந்தியின் 150 நாள் நடைப்பயணம்.. பின்னணி 10 முக்கிய அம்சங்கள்!
நாகர்கோவில்: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‛பாரத் ஜோடோ யாத்திரை' என்ற பெயரில் ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று துவங்க உள்ளார். இந்த பயணத்தின் முக்கிய 10 அம்சங்கள் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு என்பது படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கு நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலே சாட்சியாகும். பஞ்சாப்பில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் உத்தரபிரதேசம், கோவா உள்பட 4 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றும் வகையில் வெற்றி பெறவில்லை.
இதனால் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் என்பது காங்கிரஸ் கட்சிக்கு அக்னி பரீட்சையாக உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் கட்சியை பலப்படுத்தும் பணியில் காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது.

ராகுல் நடைப்பயணம்
இதன் ஒருபகுதியாக தான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 'பாரத் ஜோடோ யாத்ரா'என்ற இந்திய ஒற்றுமை நடைபயணம் துவங்க உள்ளது. இந்த நடைப்பயணம் கன்னியாகுமரியில் துவங்கி பல்வேறு மாநிலங்களை கடந்து காஷ்மீரை சென்றடைகிறது.

10 முக்கிய அம்சங்கள்
இந்திய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த நடைப்பயணம் இன்று மாலை கன்னியாகுமரி காந்தி மண்டபம் நுழைவு வாயிலில் இருந்து துவங்க உள்ளது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின், ராகுல்காந்தியிடம் தேசியக் கொடி வழங்கி துவங்கி வைக்கிறார். இந்த நடைப்பயணம் தொடர்பான 10 முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்வது முக்கியமாகும். அதன் விபரம் வருமாறு:

150 நாள் பயணம்
1. ‛பாரத் ஜோடோ யாத்திரை' எனும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 150 நாட்கள் சுமார் 5 மாதங்கள் நடைபெற உள்ளது. 12 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களை கடந்து காஷ்மீர் செல்ல உள்ளது.
2. ஒவ்வொரு நாளும் நடைப்பயணமானது காலை 7 மணி முதல் காலை 10:30 மணி வரை நடைபெறும். அதன்பிறகு ஓய்வுக்கு பின் மீண்டும் மாலை 3:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை நடைபெறும். காலையில் குறைந்த அளவிலும், மாலையில் அதிகமானவர்களும் பங்கேற்க உள்ளனர்.
3. தினமும் 22 முதல் 23 கிலோமீட்டர் தொலைவு வரை நடைப்பயணம் நடைபெற உள்ளது. மொத்தம் 3,750 கிலோமீட்டர் தொலைவு நடந்து காஷ்மீரின் ஸ்ரீநகரை இந்த நடைப்பயணம் சென்றடைய உள்ளது.

4 வகையான யாத்ரிகள்
4. இதில் பங்கேற்ப்பவர்கள் ‛பாரத் யாத்ரிகள்' ‛அதிதி யாத்திரிகள்', ‛பிரதேச யாத்ரிகள்' மற்றும் ‛தன்னார்வ யாத்ரிகள்' என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் பாரத் யாத்ரிகள் என்பவர்கள் நடைப்பயணம் முழுவதும் ராகுல்காந்தியுடன் செல்ல உள்ளனர். பிரதேச யாத்ரிகள் அந்தந்த மாநிலங்களில் மட்டும் ராகுல்காந்தியுடன் நடைப்பயணத்தில் பங்கேற்க உள்ளனர். இந்த நடைப்பயணத்தின் டேக்லைன் என்பது "Mile Kadam, Jude Watan" என்பதாகும்.

30 சதவீத பெண்கள்
5. நடைப்பயணத்தின் மூலம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சமூக பிரிவினைவாதம், அரசியல் பிரித்தாளும் நிலை ஆகியவற்றை அறவே நீக்கி மக்களை ஒருங்கிணைப்பதை நோக்கமாக கொண்டு காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.
6. ராகுல் காந்தி உட்பட 119 பேர் 'பாரத் யாத்ரிகள்' என உள்ளனர். இதில் 30 சதவீதம் பேர் பெண்கள். பாரத யாத்ரிகளின் சராசரி வயது 38. சுமார் 50,000 பேர் நடைப்பயணத்தில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.

எந்தெந்த மாநிலங்கள்
7, கன்னியாகுமரியில் துவங்கும் இந்த யாத்திரையானது திருவனந்தபுரம், கொச்சி, நிலம்பூர், மைசூரு, பல்லாரி, ராய்ச்சூர், விகாராபாத், நான்டட், ஜல்கான், இந்தூர், கோட்டா, தவுசா, அல்வார், புலந்த்ஷாஹர், டெல்லி, அம்பாலா, பதன்கோட், ஜம்மு வழியாக ஸ்ரீநகர் சென்று முடிவடைய உள்ளது.
8. மாநிலங்கள் வாரியாக பார்த்தால் இந்த யாத்திரையானது தமிழ்நாட்டின் கன்னியாகுமரில் துவங்கி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக காஷ்மீர் சென்று ஸ்ரீநகரில் முடிவடைய உள்ளது.

60 கேரவன் வசதி
9.இந்த நடைப்பயணத்துக்காக மொத்தம் சகல வசதிகளுடன் கூடிய 60 கேரவன்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளனர். இந்த கேரவன்களில் கழிவறை, குளியல் அறை, உறங்கும் அறை, சமையலறை உள்பட பல வசதிகள் உள்ளன.
10. இன்று துவங்கும் நடைப்பயணம் செப்டம்பர் 11ல் கேரளாவை அடையும். அங்கு 18 நாட்கள் நடைப்பயணம் நடக்கும். அதன்பிறகு செப்டம்பர் 30ம் தேதி கர்நாடகத்தை ராகுல்காந்தி அடைவார். அங்கு 21 நாட்கள் வரை நடைப்பயணம் நடந்து தென்மாநிலங்களை கடந்து விகாரபாத்துக்கு செல்ல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications