விண்ணில் இருந்து பூமிக்கு வந்த சுபான்ஷு சுக்லா! மனைவி, மகனை வாரி அணைத்து! காம்னாவின் சர்ப்ரைஸ்!
நியூயார்க்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுப் பணிகளை முடித்து பூமிக்குத் திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, இரண்டு மாதங்களுக்குப் பிறகு தனது மனைவி மற்றும் மகனை நேரில் சந்தித்து ஆரத்தழுவிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குப் பிடித்தமான உணவு வகைகளை எல்லாம் மனைவி சமைத்து வைத்திருப்பதாகக் கணவரிடம் தெரிவித்தார்.
விண்வெளிப் பயணம்
இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லோவாஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் நால்வரும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதள வளாகத்தில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் பொருத்தப்பட்ட பால்கன்-9 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 25 ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் புறப்பட்டனர்.

விண்ணில் ஏவப்பட்ட பால்கன்-9 ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த டிராகன் விண்கலம், தொடர்ந்து 28 மணி நேரம் பயணித்து 26 ஆம் தேதி மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. அதன்பிறகு அதனுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்ட டிராகன் விண்கலத்தில் இருந்த சுபான்ஷு உள்ளிட்ட நால்வரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர்.
ஆய்வுப் பணிகள் மற்றும் பூமிக்குத் திரும்புதல்
அங்கு அவர்கள் 18 நாட்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் இஸ்ரோவின் 7 சோதனைகளும் அடங்கும். இந்நிலையில் சுபான்ஷு உள்ளிட்ட நால்வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் கடந்த 14 ஆம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு பூமிக்குத் திரும்பப் புறப்பட்டனர்.
இதை நாசா நேரடியாக ஒளிபரப்பியது. சுபான்ஷுவின் தாய், தந்தை, மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் இதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட டிராகன் விண்கலம் சுமார் 22 மணி நேரத்திற்குப் பிறகு, அதாவது ஜூலை 15 ஆம் தேதி மதியம் 2.55 மணிக்கு வளிமண்டலப் பகுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து இந்திய நேரப்படி பிற்பகல் 3.01 மணியளவில் டிராகன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் 'சாஃப்ட் ஸ்ப்ளாஷ் டவுன்' முறையில் தரையிறங்கியது. இதன் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு பெற்றார்.
உணர்ச்சிப்பூர்வமான சந்திப்பு
தரையிறங்கிய பிறகு, சுபான்ஷு உள்ளிட்ட நால்வரும் வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத்தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர்கள் மறுவாழ்வைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சுக்லாவின் மனைவி காம்னா சுக்லா மற்றும் 6 வயது மகன் கியாஷ் சுக்லா ஆகியோர் நேற்று சுபான்ஷுவை நேரில் சந்தித்தனர்.
சுபான்ஷு சுக்லா சந்திப்பு
அப்போது சுபான்ஷு தனது மனைவியையும் மகனையும் ஆரத்தழுவிக் கொண்டார். இருவரும் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகருக்கு முன்பே வந்துவிட்டனர். கடந்த இரண்டு மாதங்களில் குடும்பத்தினரை சுக்லா நெருக்கமாகச் சந்திப்பது இதுவே முதல்முறை. விண்வெளிப் பயணத்திற்கு முன்னர், குறிப்பிட்ட இடைவெளியில் நின்று சுக்லா அவர்களைச் சந்தித்து வந்தார்.
கட்டி அணைத்த சுக்லா
இந்த உணர்ச்சிப்பூர்வமான சம்பவம் குறித்து சுபான்ஷு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "விண்வெளிப் பயணம் சவாலாக இருந்தது. பூமிக்குத் திரும்பி வந்து எனது குடும்பத்தினரைக் கட்டி அணைப்பது என்பது வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார். கணவருக்குப் பிடித்தமான உணவுகளை சமைத்து வைத்திருப்பதாக காம்னா தெரிவித்தார். சுபான்ஷுவும் காம்னாவும் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications