குட் நியூஸ்.. உலகம் முழுக்க 90% மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி வந்துடுச்சி.. WHO சொல்றதை பாருங்க
நியூயார்க்: உலகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் தடுப்பூசி காரணமாக தற்போது 90% மக்கள் நோயெதிர்ப்பு திறனை பெற்றிருக்கிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.
கடந்த 2020ல் உலகம் தொடங்கிய கொரோனா தொற்று பாதிப்பானது சர்வதேச அளவில் அதிக அளவில் உயிரிழப்புகளையும் பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தியது. இந்த பாதிப்பிலிருந்து இன்னமும் சில நாடுகள் மீள முயன்றுகொண்டிருக்கும் நிலையில், கொரோனா வைரஸிலிருந்து உருமாறிய ஒமிக்ரான் மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியது.
இதற்கிடையில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் இந்த தாக்கத்தை கட்டுக்குள் கொண்டுவந்தன. உலக நாடுகள் அனைத்தும் தங்கள் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நீயெல்லாம் ஓவர்டேக் பண்றயா.. தலித் இளைஞரை கட்டிவைத்து அடித்த உயர் சாதியினர்! பரிதாபமாக பறிபோன உயிர்
இப்போ கொஞ்சம் பரவாயில்லை
இந்நிலையில் கொரோனா வைரஸிலிருந்து உருமாற்றமடைந்த ஒமிக்ரான் வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டு கடந்த வாரத்துடன் ஓராண்டு நிறைவடைகிறது. இது குறித்து WHO ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் "தடுப்பூசி காரணமாக தற்போது 90% மக்கள் நோயெதிர்ப்பு திறனை பெற்றிருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது, "தற்போது கொரோனா தொற்று பாதிப்பின் பேரழிவு காலகட்டத்தை நாம் தாண்டிவிட்டோம். ஆனால், இதிலிருந்து நாம் இன்னும் முழுமையாக வெளியேறவில்லை. தொற்று பாதிப்பை தடுக்க கண்காணிப்பு, சோதனை மற்றும் பாதித்தவர்களை தனிமைப்படுத்துதல் ஆகியவற்றை தொடர்ந்து செய்ய வேண்டும். ஆனால், இதனை சில நாடுகள் சரிவர செய்யவில்லை. கடந்த வாரம் மட்டும் உலகம் முழுவதும் பலர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது கவலையளிக்கிறது. எனவே தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். இல்லையெனில் புதிய வைரஸ்கள் பரவுவதற்கு உகந்த சூழலை நாம் ஏற்படுத்திவிடுவோம்.
90% பேருக்கு நோயெதிர்ப்பு திறன்
ஒமிக்ரான் போலவே 500க்கும் மேற்பட்ட புதிய வைரஸ் தற்போது புழக்கத்தில் இருக்கின்றன. ஆனால் அவற்றின் வீரியம் மிகக்குறைவு. இதனால் பாதிப்புகளும் குறைவாக இருக்கின்றன. உலகம் முழுவதும் 66 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 64 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தோராய கணக்குதான். உண்மையான அளவு இதை விட அதிகமாக இருக்கும். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறத்தில் SARS-CoV-2க்கு எதிராக உலகம் முழுவதும் 90% மக்கள் நோயெதிர்பு திறனை கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் தடுப்பூசியும், தொற்று பாதிப்பிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடமும்தான்" என்று கூறியுள்ளார்.
தோற்றம்
கொரோனா உயிரிழப்புகளை பொறுத்த அளவில் அமெரிக்காதான் முதலிடத்தில் இருக்கிறது. இந்நாட்டில் தற்போது வரை ஏறத்தாழ 10 கோடி பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவதாக இந்தியாவில் 4.5 கோடி பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5.31 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உலக மக்கள் தொகையில் சீனா முதல் இடத்தில் இருந்தாலும் அந்நாட்டில் இதுவரை வெறும் 5,233 பேர்தான் உயிரிழந்துள்ளனர். பாதிப்பை பொறுத்த அளவில் 17 லட்சம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தனைக்கும் சீனாவின் வூஹான் மாகாணத்தில்தான் கொரோனா தொற்று உருவானதாக சொல்லப்படுகிறது.
போராட்டம்
சீனாவில் நிலைமை சீராக இருப்பதாக தோன்றினாலும் தற்போது தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,073 ஆக அதிகரித்திருக்கிறது. இதில் சிலருக்கு மட்டுமே அறிகுறி தென்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. அதாவது நேற்று பெய்ஜிங்கில் சோதனை மேற்கொண்டதில் 3,313 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 703 பேருக்கு மட்டுமே அறிகுறி தென்பட்டுள்ளது. மீதமுள்ள 2,610 பேருக்கு எவ்வித அறிகுறிகளும் தென்படவில்லை. இப்படியாக பல முக்கிய நகரங்களில் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரமாக்கியுள்ளது. ஆனால் மக்கள் சிலர் இதனை எதிர்த்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.