ஆறுகுட்டி வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல்கள்? - ‘கிலி'யில் முக்கிய புள்ளிகள்.. பரபரக்கும் அதிமுக!
நீலகிரி : கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியின் வாக்குமூலம் அதிமுகவின் முக்கிய புள்ளிகளுக்கு எதிராக இருப்பதால் சம்பந்தப்பட்ட சிலர் அதிர்ச்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கோடநாடு வழக்கு தொடர்பாக ஏற்கனவே இரண்டு முறை விசாரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆறுகுட்டியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கடந்த சில நாட்களாக வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையிலேயே ஆறுகுட்டியிடம் தனிப்படை போலீசார் மறு விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
சூடுபிடிக்கும் கோடநாடு வழக்கு .. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் குணசேகரனிடம் தனிப்படை போலீஸ் விசாரணை
கோடநாடு கொலை கொள்ளை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டில் பகீர் சம்பவங்கள் நடந்தேறின. கோடநாடு பங்களா காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, கொள்ளைச் சம்பவம் அரங்கேறியது. அதிமுக முக்கிய புள்ளிகளின் சொத்து ஆவணங்கள் இந்த சம்பவத்தின் போது கொள்ளையடிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
கனகராஜ் மரணம்
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட பத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதில் சேலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் கனகராஜ் மர்மமான முறையில் சாலை விபத்து ஒன்றில் பலியானார். கோடநாடு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை செய்துகொண்டார். கோடநாடு வழக்கில் விசாரணை நிறைவு நிலையை எட்டியிருந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் தற்போது மீண்டும் மறுவிசாரணை நடந்து வருகிறது.
மறு விசாரணை
இந்த மறு விசாரணையில் கோவை மேற்குமண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இதுவரை 260க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்துள்ளது. ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடமும் தனிப்படை போலீசார் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தியுள்ளனர். விவேக் உள்ளிட்டோரிடமும் ஏற்கனவே தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
பேப்பர் செந்தில் குமார்
இதனிடையே கோவையைச் சேர்ந்த மணல் காண்டிராக்டர் ஆறுமுகசாமி என்பவரது மகனும் செந்தில் பேப்பர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான செந்தில் குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். ஆறுமுகசாமி அதிமுக தலைமைக்கு மிக நெருக்கமானவர். கடந்த 2017ல் செந்தில் குமாருக்கு சொந்தமான இடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், கோடநாடு பங்களாவில் கொள்ளையடிக்கபட்டதாக கூறப்படும் சில ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். அதனடிப்படையில் தனிப்படை போலீசார் செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தினர்.
அதிமுக மோதல்
அதிமுகவை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையில் மோதல் முற்றி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், கோடநாடு வழக்கு விசாரணையில் திடீர் திருப்பங்கள் அரங்கேறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடநாடு வழக்கில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், அதிமுக மோதல் நேரத்தில் கோடநாடு வழக்கு தீவிரமடைந்திருப்பது யதேச்சையானது அல்ல என்கிறார்கள்.
ஆறுகுட்டி
கோடநாடு வழக்கு விசாரணையில் முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியின் வாக்குமூலம் மிக முக்கியமானது என்று கூறப்படுகிறது. கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டியிடம், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மூன்றாண்டுகளுக்கு முன் கோத்தகிரியில் ஒரு முறையும், கடந்த ஏப்ரல் மாதம் ஒரு முறையும் ஆறுகுட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் ஆறுகுட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
முன்னாள் எம்.எல்.ஏ
ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜ் இரண்டு வருடங்கள் ஆறுகுட்டியிடம் ஓட்டுனராகப் பணியாற்றியவர். ஆறுகுட்டி மூலமாகவே ஜெயலலிதாவுக்கு ஓட்டுநராகியுள்ளார் கனகராஜ். இதனால் கனகராஜ் தொடர்பான கேள்விகளை துருவித் துருவி கேட்டுள்ளது தனிப்படை. கடந்த முறை விசாரணையின் போது விடுபட்ட சில புள்ளிகளை வைத்தும் இந்த விசாரணையில் தனிப்படை போலீசார் கேள்விகளை கேட்டதாகக் கூறப்படுகிறது.
முக்கிய புள்ளிகளுக்கு சிக்கல்
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பான தனிப்படை போலீசாரின் விசாரணையில் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி அளித்துள்ள வாக்குமூலம், அதிமுகவின் முக்கிய புள்ளிகளுக்கு எதிராக இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் பேசியிருக்கும் ஆறுகுட்டியின் வாக்குமூலத்தால் அதிமுகவில் பலர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.