முழு கொள்ளளவை எட்டிய நீலகிரி அவலாஞ்சி அணை.... உபரி நீர் திறப்பு... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான அவலாஞ்சி அணை 145 அடி முழு கொள்ளளவு எட்டியுள்ளதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதால், கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், உதகை குந்தா உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் இங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார் பகுதியில் 14 செமீ மழை பதிவாகியுள்ளது. அவலாஞ்சி பகுதியில் 11 செமீ மழையும், மேல் கூடலூர் பகுதியில் 10 செமீ மழையும் பதிவாகியுள்ளது. மேல் பவானி பகுதியில் 9 செமீ மழையும் சோலையாறு பகுதியில் 8 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கூர்த்தி, குந்தா, எமரால்டு, பைக்காரா, அப்பர் பவானி போன்ற அணைகள் முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து, அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பைக்கார அணை தனது முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. குந்தா அணையிலிருந்து டனல் வழியாக தண்ணீா் வெளியேற்றப்படுவதால், நீா்வரத்து அதிகரித்து பில்லூா் அணைக்கு திறந்து விடப்பட்டது.
இந்நிலையில், அவலாஞ்சி மற்றும் எமரால்டு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக 171 அடி உயரம் கொண்ட அவலாஞ்சி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி. உதகை கோட்டாட்சியர் துரைசாமி முன்னிலையில் அணையின் ஒரு மதகு திறந்து 200 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. சராசரியாக 300 கன அடி முதல் 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எமரால்டு, பெரியார் நகர், சுரேந்தர் நகர், எமரால்டு வேலி உள்ளிட்ட கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். பெரியார் நகர், சுரேந்தர் நகர் இருப்பவர்கள், தக்கர் பாபா நடுநிலைப்பள்ளி எமரால்டு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் பாதுகாப்பாக தாங்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உதகை உதகை கோட்டாட்சியர் துரைசாமி தெரிவித்தார்.
மேலும் தண்ணீர் அதிகமாக செல்லும் பகுதிகளில் கால்நடைகளை மேய்ப்பதற்கும், வேடிக்கை பார்ப்பதற்கும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.