‘மாஸ்டர்’ மைண்டை நெருங்கும் போலீஸ்.. ‘16 சிம் கார்டு’ கனகராஜுக்கு வந்த 100 கால்கள்.. 516 தடயங்கள்!
நீலகிரி : கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்த நேரத்தில் கனகராஜை 100க்கும் மேற்பட்டோர் தொடர்பு கொண்டதைக் கண்டுபிடித்து அப்போது பதிவான 516 தகவல் பரிமாற்றங்களை போலீசார் கைப்பற்றி இருப்பதால் இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் புதிய திருப்பமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜின் சகோதரர் தனபாலிடம் இருந்து கனகராஜின் பெயரில் இருந்த 6 சிம் கார்டுகள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போலீசார், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் மாஸ்டர் பிரெய்னை நெருங்கிக் கொண்டிருப்பதால், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகள் விரைவில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொடநாடு கொலை வழக்கு.. ”தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கனும்” மாஜி எம்எல்ஏ ஆறுக்குட்டி பரபரப்பு!
கோடநாடு எஸ்டேட்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017ஆம் ஆண்டு கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நடந்தது. இதில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட 11 பேர் ஈடுபட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். கோடநாடு கொலை கொள்ளைச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே சேலத்தில் நடந்த விபத்தில் மர்மமான முறையில் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்தார்.
மறுவிசாரணை
இந்த வழக்கு விசாரணை சுணங்கி இருந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தீவிரமாக மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் கோடநாடு கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது. சயான், வாளையார் மனோஜ் உட்பட 4 பேர் ஆஜராகினர். அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்.
516 செல்போன் தடயங்கள்
அப்போது, இதுவரை 316 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றதாகவும், 516 செல்போன் தடயங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்தார். மேலும், கேரளா, கர்நாடகா போன்ற பகுதிகளில் விசாரணையை விரிவுபடுத்தவேண்டிய சூழல் இருப்பதாலும், வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் வாளையார் மனோஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதாலும் கூடுதல் அவகாசம் வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
13 சிம் கார்டுகள்
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சேலம் வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜ் 13 சிம் கார்டுகள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அதில் 6 சிம் கார்டுகள் கனகராஜ் பெயரில் இருந்துள்ளன. கோடநாடு சம்பவம் நடைபெறுவதற்கு முன்பும், சம்பவத்திற்கு பின்பும் கனகராஜ் சுமார் 100 பேரிடம் பேசியுள்ளார். அந்த நபர்கள் யார் யார் என்று விரிவாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது. 516 தகவல் பரிமாற்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என போலீஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
உண்மைத்தன்மை ஆய்வு
கனகராஜ் மேற்கொண்ட தகவல் பரிமாற்றங்களின் உண்மைத்தன்மையை அறிய ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. தொலைதொடர்பு நிறுவனங்களிடம் கூடுதல் தகவல்கள் சேகரிக்க வேண்டி உள்ளது. எனவே விசாரணை மேற்கொள்ள அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதை ஏற்ற நீதிபதி முருகன், இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதம் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மாஸ்டர் மைண்டை நெருங்கும் போலீஸ்
மறுவிசாரணையில், கனகராஜ் பயன்படுத்திய சிம் கார்டுகளின் வழியாக முடிச்சைப் பிடித்துள்ள தனிப்படை போலீசார், அந்தக் கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி இருப்பதன் மூலம், முக்கிய குற்றவாளியை விரைவில் நெருங்கி விடுவார்கள் எனக் கூறப்படுகிறது. இதனால், வழக்கு அடுத்த மாதம் அக்டோபர் 28ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்போது முக்கியமான முன்னேற்றங்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.