பிரான்ஸ் போலீஸ் துப்புத்துலக்க உதவிய சிகரெட் லைட்டர்- இந்தியர் கொலை வழக்கில் மர்மம் விலகியது
பிரான்ஸ் நாட்டில் கடந்த ஒரு வருடகாலமாக கொலையாளியை மண்டையை பிய்த்துக்கொண்டு போலீஸ் தேடி வந்த நிலையில் இந்தியர் கொலை செய்யப்பட்ட வழக்கின் கொலையாளியை சிகரெட் லைட்டர் காட்டிக்கொடுத்துள்ளது.
பாரிஸ்: 'சிறு துரும்பும் பல் குத்த உதவும்' என்பார்கள். சிகரெட் லைட்டரும் கொலை வழக்கில் துப்பு துலக்க உதவும் என்பதை பெல்ஜியம் போலீசார் நிரூபித்துள்ளனர். இந்தியர் தர்சன் சிங் கொலை வழக்கின் குற்றவாளியைத்தான் சிகரெட் லைட்டர் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர். திகில் திருப்பங்களும், மர்மங்களும் நிறைந்த இந்த கொலை வழக்கில் கொலையாளி எப்படி சிக்கினான் என்பதை பார்க்கலாம்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலை நேரத்தில் துப்புறவு தொழிலாளி ஒருவர் போர்பர்க்கில் உள்ள குழியில் சுத்தம் செய்து கொண்டிருந்தார். திடீரென துர்நாற்றம் வீசியது அது எங்கிருந்து வருகிறது என்று பார்த்த போது ஒரு மூட்டையில் இருந்துதான் வந்தது என்று கண்டுபிடித்தார் அந்த தொழிலாளி.
பெரிய பெரிய எறும்புகள் மொய்த்துக்கொண்டிருந்த அந்த மூட்டையைப் பார்த்து பயந்த அந்த தொழிலாளி உடனடியாக போலீசில் புகார் அளிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த மூட்டையில் இருந்து முற்றிலும் அழுகிய நிலையில் இருந்த சடலத்தை கண்டு பிடித்தனர்.
அந்த சடலம் யாருடையது ஆணா, பெண்ணா கொன்று போட்டவர்கள் யாராக இருக்கலாம் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் எதுவும் தெளிவாக தெரியவில்லை. கைரேகை, டிஎன்ஏ பரிசோதனை மூலமும் எதுவும் தெரியவில்லை.
அந்த உடலின் சட்டைப்பாக்கெட்டில் ஒரே ஒரு சிகரெட் லைட்டர் மட்டுமே இருந்தது. அந்த லைட்டரின் மேல் பகுதியில் kroeg cafe என்று அச்சிடப்பட்டிருந்தது. அந்த லைட்டரை எடுத்துக்கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
சமீபத்தில் மாயமானவர்கள் யார் யார் என்று போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கிய போது பெல்ஜியத்தில் வேலை செய்த இந்தியர் தர்சன்சிங் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் மயாமானதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த கேபேவும் தர்சன்சிங் வீட்டின் அருகில் இருந்தது. உடனே ஒன்றும் ஒன்று ரெண்டு என்று கணக்குப் போட்ட போலீசார் மீண்டும் டிஎன்ஏ பரிசோதனை நடத்தினர். தர்சன் சிங் பயன்படுத்திய டூத்பிரஸ்சில் இருந்து டிஎன்ஏவை எடுத்தனர். இரண்டும் மேட்ச் ஆனது.
தர்சன்சிங்கை கொன்றது யாராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தர்சனுடன் இருந்த மற்றொரு இந்தியர் கொலையாளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.