500 மாணவிகளுக்கு நடுவே.. தனியாக தேர்வெழுதிய மாணவர்.. அப்புறம் நடந்த ட்விஸ்ட்..மருத்துவமனையில் அனுமதி
பீகாரில் 500 மாணவிகளுக்கு நடுவே தனியாளாக தேர்வெழுதிய மாணவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாட்னா: பீகாரில் உள்ள தனியார் பள்ளியில் 500 மாணவிகளுக்கு நடுவே தனி மாணவராக தேர்வெழுத சென்ற 12ம் வகுப்பு மாணவன் திடீரென்று மயங்கினான். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவன் நலமாக உள்ள நிலையில் அங்கு என்ன நடந்தது என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
பீகார்.. பள்ளி, கல்லூரி தேர்வுகளில் மாணவர்கள் அதிகமாக காப்பி அடிப்பதற்கு பெயர் பெற்ற மாநிலங்களில் ஒன்றாகும். இங்குள்ள நாளந்தா, நவாடா, முங்கர், பாங்கா, தர்பங்கா, சமஸ்திபூர், அராரியா உள்ளிட்ட பல மாவட்டங்களில் இதற்கு முன்பு மாணவர்கள் தேர்வில் மாஸ் காப்பி அடித்துள்ளனர்.
இதுதொடர்பான படங்கள், வீடியோக்கள் கூட இணையதளங்களில் அவ்வப்போது டிரெண்டாகியுள்ளன. தற்போது அங்கு தேர்வுகள் முறையாக நடத்த உத்தரவிடப்பட்டுள்ளன. மாணவர்கள் காப்பியடித்து எழுதுவதை தடுக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

12ம் வகுப்பு தேர்வு
இந்நிலையில் தான் தற்போது பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் துவங்கி உள்ளன. நேற்று முன்தினம் முதல் தேர்வுகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. நாளந்தா மாவட்டத்தை சேர்ந்த 17 வயது நிரம்பிய மணிஷ் சங்கர் பிரசாத் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார். இவருக்கான தேர்வறை என்பது நாளந்தா அருகே சந்தர்கார்க் பகுதியில் உள்ள பிர்லியண்ட் காண்வென்ட் பள்ளியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

500 மாணவிகள்
இதையடுத்து மணிஷ் சங்கர் பிரசாத் தேர்வெழுத சென்றார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது தேர்வு மையம் முழுவதும் மாணவிகளாகவே இருந்தனர். எந்த மாணவரும் இல்லை. மாணவிகள் மட்டும் சுமார் 500 பேர் வரை அங்கு இருந்தனர்.அதாவது அந்த தேர்வு மையம் முழுவதும் மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மணிஷ் சங்கர் பிரசாத்துக்கும் அதுவே கிடைத்துள்ளது. இதனால் மணிஷ் சங்கர் பிரசாத்துக்கு பதற்றம் ஏற்பட்டது.

மயங்கிய மாணவர்
இதற்கிடையே அவரது தேர்வு அறையில் 50 மாணவிகளுக்கு மத்தியில் தேர்வெழுத அமர வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிக கூச்ச சுபாவம் கொண்ட மணிஷ் சங்கர பிரசாத்துக்கு இது வியர்வையை வரவழைத்தது. மேலும் அவர் திடீரென மயங்கினார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் நலமாக உள்ளார்.

அத்தை கூறியது என்ன?
இந்நிலையில் தான் சம்பவம் குறித்து மணிஷ் சங்கர் பிரசாத்தின் அத்தை கூறுகையில், ‛‛தேர்வு மையத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் இருந்தனர். இந்நிலையில் தான் எனது மருமகன் மணிஷ் சங்கர் பிரசாத்துக்கு இந்த பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கியது. இதனால் அவன் மயக்கமடைந்தான். தற்போது நலமாக உள்ளான்'' என்றார். இதற்கிடையே தேர்வு மையத்தை மணிஷ் சங்கர் பிரசாத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் அதுபற்றி விரைவில் முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வலைதளங்களில் கருத்து
இந்நிலையில் தான் 500 மாணவிகளுக்கு மத்தியில் ஒரேயொரு மாணவனாக தேர்வெழுத சென்று மணிஷ் சங்கர் பிரசாத் மயங்கிய செய்தி இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதற்கு பல தரப்பினரும் தற்போது கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications