பீகார் தேர்தல் முடிவுகளில் பெரும் திருப்பம்.. எக்ஸிட் போல் முடிவுகளுக்கு நேர் எதிராக மாறிய ரிசல்ட்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், எக்ஸிட் போல் என்ன சொன்னதோ அதற்கு நேர் எதிராக சென்று கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது.
தேர்தலுக்குப் பிறகு மக்களிடம் கருத்து கேட்டு ஒளிபரப்பபடுவது எக்ஸிட் போல். பொதுவாக இது தேர்தல் முடிவுகளுடன் சரியாகப் பொருந்திப் போகும்.
பீகாரிலும், மூன்றாவது கட்ட தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்று முடிந்ததும், மாலை 6 மணிக்கு மேல், பல்வேறு நிறுவனங்கள், டிவி சேனல்கள் உடன் இணைந்து கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன.
இதில் கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல் முடிவுகளை அவை ஓரளவுக்கு சரியாக கணித்து விட்டன என்று சொல்லலாம். ஆனால், பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகளை கணிப்பதில் அவை தோல்வி அடைந்துள்ளன.
உதாரணத்துக்கு, ரிபப்ளிக் டிவி, ஜன் கி பாத் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி அதிகபட்சம் 117 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என்று கூறப்பட்டது. அதேநேரம் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி 138 தொகுதிகள் வரை வெல்லக் கூடும் என்றே கணிக்கப்பட்டது.
ரிபப்ளிக் டிவியின் இந்த கருத்துக் கணிப்பால் பாஜகவினரே மனம் தளர்ந்து போயினர். இன்னொரு பக்கம் பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகளை கடந்த காலங்களில் சரியாக கணித்து கூறிய -இந்தியா டுடே மை ஆக்சிஸ் இந்தியா- தேர்தல் முடிவுகளில், பாஜக கூட்டணிக்கு அதிகபட்சம் 91 தொகுதிகள் கிடைக்கும் என்றும், மகாகத்பந்தன் கூட்டணிக்கு 161 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று கணிக்கப்பட்டது.
இப்படி பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகளும் ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணிக்கு எளிதான வெற்றி இருக்கும் என்று கணித்தது. சி வோட்டர் எக்ஸிட் போல் மட்டும் இரு தரப்புக்கும் கடுமையான போட்டி இருக்கும், ஆனால் 120 தொகுதிகளை ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணி வெல்லும். 116 தொகுதிகளை பாஜக கூட்டணி வெல்லும் என்று கணித்தது.
செய்தியாளர் மோசஸ் கொலை... சமூக விரோதிகளுக்கு யார் கொடுக்கும் துணிச்சல்..? வேல்முருகன் பாய்ச்சல்..!
ஆனால், காலை 11 மணி நிலவரப்படி எக்ஸிட் போல் முடிவுகளுக்கும், தேர்தல் முடிவுகளும் சம்பந்தமில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. பாஜக கூட்டணி 134 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூட்டணி சுமார் 95 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.
பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுக்கு மாறாக இப்படி ஒரு சட்டசபை தேர்தல் முடிவுகள், சமீப காலங்களில் வெளியானது கிடையாது. அந்த வகையில் பீகார் மக்களின் மன ஓட்டத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.