அடிமடியிலேயே கை வைத்த பாஜக.. சட்டென கழற்றிவிட்ட நிதிஷ் குமார்.. பாஜக - ஜேடியூ கூட்டணி முறிந்தது ஏன்?

Subscribe to Oneindia Tamil

பாட்னா: இருக்கிற இடத்தில் இருந்து இருக்கிற கட்சியை விட்டு வேறு கட்சிக்கு தாவும் ஒரே மனோபலம் கொண்ட தலைவர் நான்தான் என்று வண்டுமுருகன் வடிவேலு சொல்லி இருப்பார்... இந்திய அரசியலில் அப்படி ஒரு தலைவர் என்றால் அது நிதிஷ் குமார் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்.

Recommended Video

    Bihar-ல் கலைகிறது பாஜக கூட்டணி ஆட்சி

    ஒரு பக்கம் இடதுசாரிகளுடன் காதல்.. இன்னொரு பக்கம் வலதுசாரிகளுடன் திருமணம் என்று அரசியலிலேயே காத்து வாக்கில் ரெண்டு காதல் செய்தவர்தான் நிதிஷ் குமார்! ஆம் ஐக்கிய ஜனதா தளம் தொடங்கப்பட்ட போது அது சோஷலிச கட்சியாகவே முன்னிறுத்தப்பட்டது.. ஆனால் 2000ல் இவர் பாஜகவுடன் கூட்டணி வைத்த போது மொத்தமாக இவரின் அரசியல் பயணமே மாறிப்போனது.

    2000ல் நிதிஷ் பாஜகவுடன் கூட்டணி வைத்து.. சில மணி நேரங்களுக்கு முதல்வராக இருந்து தொங்கு சட்டசபை காரணமாக பதவியை இழந்தார். 2005ல் மீண்டும் பாஜகவுடன் சேர்ந்து நிதிஷ் ஆட்சி அமைத்தார். 2010ல் மீண்டும் பாஜகவுடன் சேர்ந்து பீகாரில் ஆட்சிக்கு வந்த நிதிஷ் குமார்.. 2013ல் பாஜக கூட்டணியில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக வெளியேறினார்.

    முக்கியமாக மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவித்ததற்கு நிதிஷ் குமார் பாஜகவை கடுமையாக எதிர்த்தார்.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு 2015ல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுடன் கூட்டணி வைத்து நிதிஷ் ஆட்சி அமைத்தார். இதில் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வர் ஆனார். பின்னர் அதே தேஜஸ்வி யாதவ் மீது நிதிஷ் குமார் ஊழல் குற்றச்சாட்டுகளை வைக்க இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் தேஜஸ்வி யாதவ் உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு 2020ல் ஆட்சியை பாதியில் கவிழ்த்தார். உடனே பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார்.

    பின்னர் மீண்டும் 2020ல் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சிக்கு வந்த நிதிஷ் குமார்.. இப்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணியை முறிக்கும் முடிவை எடுத்துள்ளார். பாஜக டூ ஆர்ஜெடி டூ பாஜக டூ ஆர்ஜெடி.. இதுதான் நிதிஷின் அரசியல் பயணம்!

     தகவல் வெளியானது

    தகவல் வெளியானது

    பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பீகாரில் பாஜக - நிதிஷ் குமார் கூட்டணியில் உருவான என்டிஏ அரசு கவிழுகிறது. இன்று மாலையே பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு.. முதல்வர் நிதிஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராக தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலையே ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவுடன் சேர்ந்து நிதிஷ் குமார் ஆளுநரை பார்த்து கடிதம் அளிக்க உள்ளார்.

     புதிய கூட்டணி

    புதிய கூட்டணி

    தங்களின் புதிய கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளதை நிரூபிக்கும் வகையில் இவர் கடிதம் அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பீகாரில் பெரும்பான்மை பெற 127 இடங்கள் தேவை. இதில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 45, ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு 80, சிபிஐக்கு 12, சிபிஎம்க்கு 2, காங்கிரசுக்கு 19 இடங்கள் உள்ளன. இவர்கள் கூட்டணி வைத்தால் பீகாரில் எளிதாக ஆட்சி அமைக்க முடியும் என்பதால் சிக்கல் இல்லை! இதனால் பீகாரில் பாஜக - ஜேடியூ கூட்டணி ஆட்சியை இழக்கிறது. சரி அதெல்லாம் இருக்கட்டும் இந்த கூட்டணி முறிய என்னதான் காரணம்?

    சபாநாயகர்

    சபாநாயகர்

    பாஜக - நிதிஷ் குமார் மோதல் முதலில் சட்டசபை சபாநாயகர் தேர்வில் இருந்துதான் தொடங்கியது. நிதிஷ் குமார் தன்னுடைய கட்சி எம்எல்ஏ சபாநாயகர் ஆக வேண்டும் என்று நினைத்தார். ஆனால் பாஜக சார்பாக விஜய் குமார் சின்கா சபாநாயகர் ஆனார். இதையே நிதிஷ் விரும்பவில்லை. இருவருக்கும் இடையில் சட்டசபையிலேயே பல முறை மோதல் வந்தது. ஒரே கூட்டணி என்றாலும் சட்டசபையிலேயே முதல்வர் நிதிஷை சபாநாயகர் விஜய் குமார் சின்கா கடுமையாக விமர்சித்தார். இதுதான் மோதலுக்கு பிள்ளையார் சுழி போட்டது.

    ஆர்சிபி சிங் மோதல்

    ஆர்சிபி சிங் மோதல்

    அதன்பின் ஐக்கிய ஜனதா தளம் எம்பி ஆர்சிபி சிங் மூலம் இன்னொரு பிரச்சனை வந்தது. ஆர்சிபி சிங் ஒரு காலத்தில் நிதிஷுக்கு நெருக்கமாக இருந்தார். ஆனால் எம்பி ஆன பின் பாஜகவுடன் நெருக்கமான இவர்.. மோடி, அமித் ஷாவை அடிக்கடி சந்தித்தார். இதன் மூலம் ராஜ்ய சபா எம்பியான இவருக்கு மத்திய அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது. மத்திய இரும்புத்துறை அமைச்சராக இருந்த ஆர்சிபி சிங்.. தேசிய அளவில் ஐக்கிய ஜனதா தளத்தின் முகமாக தெரிய தொடங்கினார். என்னவோ தான்தான் ஜேடியூ என்பது போல நடந்து கொண்டார். விளைவு ஆர்சிபி சிங்கிற்கும் - நிதிஷுக்கும் மோதல் ஏற்பட்டது.

    ஷிண்டே அரசியல்

    ஷிண்டே அரசியல்

    இதனால் கடந்த ராஜ்ய சபா தேர்தலில் ஆர்சிபி சிங்கிற்கு போட்டியிடவே வாய்ப்பை மறுத்தார் நிதிஷ் குமார். இதனால் எம்பி பதவியை இழந்த ஆர்சிபி சிங் அமைச்சர் பதவியையும் இழந்தார். அதோடு நிதிஷ் குமாரால் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். மகாராஷ்டிராவில் ஷிண்டே மூலம் உத்தவ் தாக்கரேவை பாஜக காலி செய்தது. அதேபோல் ஆர்சிபி சிங்கை வைத்து தன்னை வீழ்த்த கூடாது என்று சுதாரித்த நிதிஷ் குமார் ஆர்சிபி சிங்கை கட்சியில் இருந்தே தூக்கினார். இது பாஜக - நிதிஷ் இடையே மோதலை விரிவுபடுத்த காரணமாக அமைந்தது.

    பேச்சை கேட்கவில்லை

    பேச்சை கேட்கவில்லை

    அதோடு முதல்வராக இருந்தாலும் நிதிஷ் குமாரின் பேச்சுக்கு அங்கு மதிப்பு குறைந்து கொண்டே இருந்தது. சட்டசபையில் பாஜக சபாநாயகர் சொல்வதே சட்டம். இன்னொரு பக்கம் பாஜகவை சேர்ந்த 16 அமைச்சர்கள் முதல்வர் சொல்வதை கேட்காமல் தனியாக செயல்பட்டனர். இதை எல்லாம் பார்த்த நிதிஷ் குமார்.. கண்டிப்பாக அடுத்த தேர்தலில் நமக்கு முதல்வர் பதவி கிடைக்காது. பாஜகவுடன் கூட்டணியில் இருந்தால் நமக்கு முதல்வர் பதவி மீண்டும் கிடைக்காது என்பதை உணர்ந்து இருப்பார்.

    சிராக் பாஸ்வான்

    சிராக் பாஸ்வான்

    அது மட்டுமா நிதிஷை மேடைக்கு மேடைக்கு அவமானப்படுத்திய லோக் ஜன சக்தியின் தலைவர் சிராக் பாஸ்வானை பாஜக மறைமுகமாக ஆதரித்தது. கடந்த சட்டசபை தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும் நிதிஷ் குமாருக்கு எதிராக சீராக பாஸ்வான் ஆட்களை நிறுத்தியதால்தான்.. நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. நிதிஷை உள்ளே இருந்த படியே வீழ்த்த பாஜக பயன்படுத்திய "பிளான் பி"தான் சிராக் என்று அப்போதே வாதங்கள் வைக்கப்பட்டன. இதுவும் நிதிஷை கோபத்திற்கு உள்ளாக்கியது.

    கடந்த முறை முதல்வர் பதவி

    கடந்த முறை முதல்வர் பதவி

    இப்போது பாஜகதான் பீகாரில் 2ம் பெரிய கட்சி. ராஷ்டிரிய ஜனதா தளம் முதல் பெரிய கட்சி. ஐக்கிய ஜனதா தளம் மூன்றாம் இடத்திற்கு போய்விட்டது. இதனால் அடுத்த முறை ஐக்கிய ஜனதா தளத்திற்கு முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்பு இல்லை. பாஜக மீண்டும் நிதிஷுக்கு முதல்வர் பதவி தர வாய்ப்பு குறைவு. பெரும்பாலும் 2024 லோக்சபா தேர்தல் வரை நிதிஷ் தயவு பாஜகவிற்கு தேவைப்படும். அதன்பின் நிதிஷை பாஜக கழற்றிவிடும் என்றே அரசியல் வல்லுனர்கள் கணித்தனர். இது நிதிஷுக்கும் தெரியாமல் இல்லை.

    2024க்கு பின் கழற்றிவிடும்

    2024க்கு பின் கழற்றிவிடும்

    மகாராஷ்டிராவில் உத்தவ் ஒதுக்கப்பட்டது போல தானும் 2024க்கு பின் ஒதுக்கப்படுவோம் என்பதை நிதிஷ் உணர்ந்து கொண்டார். இதன் காரணமாகவே தற்போது நிதிஷ் பாஜகவுடனான கூட்டணியை முறிக்க முடிவு செய்துள்ளார். எந்த தேஜஸ்வியை ஊழல் செய்தவர் என்று நிதிஷ் சொன்னாரோ அதே தேஜஸ்வியுடன் நிதிஷ் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளார்.. இப்போது முதல் வரியை படித்து பாருங்கள்.. இருக்கிற இடத்தில் இருந்து இருக்கிற கட்சியை விட்டு வேறு கட்சிக்கு தாவும் ஒரே மனோபலம் கொண்ட தலைவர் நான்தான் என்று வண்டுமுருகன் வடிவேலு சொல்லி இருப்பார். அது வேறு யாரும் இல்லை சாட்சாத் நிதிஷ் குமார்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+