பீகாரில் ஷாக்! ஒரு தொகுதியில் ஆர்ஜேடி-க்கு ஈஸி வெற்றி.. மற்றொன்றில் தட்டு தடுமாறி வென்ற பாஜக
பாட்னா: பீகார் மாநிலத்தில் இன்று வெளியாக உள்ள இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் நிதிஷ் தரப்புக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நவ.3ஆம் தேதி தெலங்கானா, பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. எதிர்பார்த்ததை போலவே பிற்பகலுக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன.
பீகாரில் பரபர- நவ.3 இடைத்தேர்தலுக்குப் பின் லாலு, நிதிஷ் கட்சிகள் ஆர்ஜேடி,ஜேடியூ ஒன்றாக இணையும்?
பீகார்
இந்த இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் தரப்புக்கு எவ்வித பாதிப்பையும் தராது என்ற போதிலும், மக்களிடையே இன்னும் தங்கள் செல்வாக்கு உள்ளதை நிரூபிக்க இந்த இடைத்தேர்தல் முக்கியம். பீகாரில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கு மொகமா தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த ஆர்ஜேடியு-இன் அனந்த் சிங் சட்ட விரோதமாகத் துப்பாக்கி வைத்திருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் அங்கு இடைத்தேர்தல் நடந்தது. அந்த தொகுதியில் அவரது மனைவி நீலம் தேவி போட்டியிட்டார்
இரு தொகுதிகள்
மற்றொரு தொகுதியான கோபால்கஞ் சுமார் 20 ஆண்டுகளாக பாஜகவிடம் உள்ள தொகுதியாகும். 20 ஆண்டுகளுக்குப் பின், அந்த தொகுதியை பாஜக இழக்கும் என்றே கருத்துக்கணிப்புகள் கூறியது. ஆர்ஜேடி சார்பில் இதில் மோகன் பிரசாத் குப்தா களமிறங்கினார். அவருக்கு எதிராக பாஜகவின் குசும் தேவி போட்டியிட்டார். குசும் தேவியின் அவரது கணவர் சுபாஸ் சிங்கின் மரணம் காரணமாக இடைத்தேர்தல் நடக்கிறது.
முக்கியம்
வெறும் இரு தொகுதிகளின் முடிவுகள் தான் என்றாலும் கூட பீகாரில் ஆளும் தரப்பு தனது கவுரவத்தை நிரூபிக்கவே இந்த தேர்தலில் களமிறங்குகிறது. ஏனென்றால் பாஜக நிதிஷ்குமார் கூட்டணி முறிவுக்குப் பின் நடக்கும் முதல் இடைத்தேர்தல் இதுவாகும். அங்கு ஆட்சியிலுள்ள நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ் கூட்டணியை மக்கள் நிராகரிப்பார்கள் என பாஜக தலைவர்கள் கூறிவரும் நிலையில், இந்தத் தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பாஜகவுக்கு ஷாக்
இந்தத் தேர்தல் முடிவுகள் தொகுதிகள் எண்ணிக்கை ரீதியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற போதிலும் மக்களின் மனங்களில் இது தாக்கத்தை ஏற்படுத்தும். அடுத்த 2024 மக்களவை தேர்தலுக்கும் கூட இது சிறு முன்னோட்டமாக அமையலாம். ஆளும் தரப்பும் சரி பாஜகவும் சரி தாங்கள் தான் இந்த இடைத்தேர்தலில் வெல்வோம் என நம்பிக்கையுடன் கூறி வருகிறது. இதில் இரு தொகுதிகளில் மொகமா தொகுதியை ஆர்ஜேடி வென்றுள்ள நிலையில், கோபால்கஞ் தொகுதியை பாஜக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தக்க வைத்துக் கொண்டது.
தேர்தல் முடிவுகள்
இந்த இடைத்தேர்தலுக்கு பாஜக பெரியளவில் பிரசாரம் செய்தது. அதேநேரம், ஆளும் கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் - நிதிஷ் மற்றும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் இருவருமே நேரடியாகப் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. மாறாகத் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் ஜேடி(யு) தலைவர் ராஜீவ் ரஞ்சன் இருவரும் தான் அனைத்து தேர்தல் பணிகளையும் கண்காணித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.