மறைந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் தகனம்… புதுச்சேரி அரசு சார்பில் முழு மரியாதையுடன் தகனம்
புதுச்சேரி : புதுச்சேரியில் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் இறுதி ஊர்வலத்துக்கு பின்னர் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பிரபஞ்சன் சிதைக்கு அவரது மூத்த மகன் கவுதம் தீ மூட்டினார்.
மானுடம் வெல்லும், வானம் வசப்படும் என்ற இரட்டை நாவல்கள் மூலம் புதுச்சேரியின் பிரெஞ்ச் காலனி ஆதிக்கத்துடன் ஒட்டிய இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஆனந்தரங்கம் பிள்ளையின் டைரிக்குறிப்புகளின் ஆதார அடிப்படையில் படைப்பிலக்கியமாக்கியவர் பிரபஞ்சன்.
இந்த நூலுக்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. சந்தியா உள்ளிட்ட பெண்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு ஏராளமான நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதியவர் பிரபஞ்சன். உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானார்.
அவரது உடல் புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப் பட்டது. பேண்ட் வாத்தியங்கள் இசைக்க அவரது உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டது.
அதனை தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அமைச்சர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். மாலை 4 மணிக்கு பிரபஞ்சன் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு சன்னியாசி தோப்பு மயானத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டது.
பின்னர் 21 குண்டுகள் முழங்க, பிரபஞ்சன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. பிரபஞ்சன் சிதைக்கு அவரது மூத்த மகன் கவுதம் தீ மூட்டினார்.