பெண்களுக்கு இலவச கல்வி முதல் கடன் தள்ளுபடி, வட்டியில்லா கடன் வரை - புதுச்சேரியில் பாஜக வாக்குறுதி
பெண்களுக்கு மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரைக்கும் இலவச கல்வி அளிக்கப்படும் என்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ. 5 லட்சம் வரை வட்டியில்லாத கடன் வழங்கப்படும் என்றும் புதுச்சேரி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குறுதிகளாக
புதுச்சேரி: பெண்களுக்கு மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாக வழங்கப்படும் எனவும், கொரோனா காலத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும் பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் அதிமுக, பாஜக, கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆா். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 9 தொகுதிகளிலும் அதிமுக 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் வெளியிட்டு பேசினார்.
பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் 12 தலைப்புகளில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
புதுச்சேரியில் ஒருங்கிணைந்த மாபெரும் ஆடை உற்பத்தி தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்படும். புதுச்சேரிக்கு தனி பள்ளிக்கல்வி தேர்வாணையம் உருவாக்கப்படும். 9 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும்.
மழலையர் முதல் உயர்கல்வி வரை பெண்களுக்கு இலவச கல்வி. கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். உயர்கல்வி பயிலும் மாணவிளுக்கு இலவச இருசக்கர வாகனம். இனி எந்த ஆன்மீக வழிபாட்டு தலங்களும் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படாது.
மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு 150 அடி சிலை நிறுவப்படும். கொரோனா பேரிடர் காலத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பெறப்பட்ட கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி. மகளிர் அனைவருக்கும் இலவச பொது போக்குவரத்து வசதி.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 50% பெண்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யப்படும் மற்றும் காவல்துறை பணியிடங்களில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
அனைத்து மகளிருக்கும் இலவச மருத்துவ உதவிகள். 2.5 லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். நடமாடும் நியாயவிலைக் கடைகள் மூலம் பொருட்கள் வீடு தேடி வரும்.
சென்னையுடன் புதுச்சேரி மற்றும் காரைக்கால் இணைப்பதற்காக கடல் வழி விமானமா மற்றும் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும். 24 மணி நேரமும் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும். அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.2000 உதவித்தொகை பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். மீனவர்களுக்கு நவீன வீடுகள் கட்டித்தரப்படும்.
மீன்பிடி கப்பல்களுக்கு ரூ.11 லட்சம் வரை மானியம். அனைத்து மீனவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். மீன்பிடி தடைக்காலம் நிவாரணம் ரூ 5 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் வரை உயர்த்தப்படும். மூடப்பட்ட நூற்பாலைகளும், பஞ்சாலைகள் மற்றும் கூட்டுறவு மில்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைவருக்கும் பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம். 50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை. மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் ரூ.3000 முதல் ரூ. 5000 வரை உயர்த்தி வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு ஆன்மீக சுற்றுலா திட்டம். ஊனமுற்றவர் மாத ஓய்வூதியம் ரூ.1750 லிருந்து ரூ.4000 வரையும், விதவை ஓய்வூதியம் ரூ.2000 முதல் ரூ.3000 எனவும் உயர்த்தி வழங்கப்படும்.
புதிய அரசு பணியாளர் தேர்வாணையம் ஏற்படுத்தப்படும். பொதுமக்கள் அரசு சேவைகளை எளிதில் பெற Puducherry.gov.in வலைதளம் மற்றும் செயலி தொடங்கப்படும். அனைத்து கல்வி மற்றும் வேலை வாய்ப்பு நடவடிக்கைகளிலும் பொருளாதார ரீதியான பலவீனமான பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு. உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும்.
புதுச்சேரி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனிமாநில அந்தஸ்து கோரிக்கை மற்றும் 6,000 கோடிக்கு மேற்பட்ட கடன் தள்ளுபடி வாக்குறுதி இடம்பெறவில்லை.
பாஜக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனிமாநில அந்தஸ்து கோரிக்கையை பிரதானமாக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கும் நிலையில், பாஜக தேர்தல் அறிக்கையில் தனிமாநில அந்தஸ்து வாக்குறுதி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.