மோடி + ரஜினிகாந்த் - திராவிடம்! வேற லெவல் பிளான்.. கொளுத்திவிட்டு அர்ஜுன் சம்பத் டமால் டுமீல் பேட்டி
புதுச்சேரி : 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும், திராவிட மாயையை அகற்றவும் ரஜினி குரல் கொடுத்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கும், ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜூன் சம்பத், ரஜினிகாந்த், பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார்.

ரஜினி அரசியல்
அரசியலுக்கே வராவிட்டாலும், 25 ஆண்டு காலமாக ரஜினியின் அரசியல் தொடர்பான பேச்சுகளும், நகர்வுகளும், தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளன. தனது திரைப்படங்களிலும் பொதுவெளியிலும் ரஜினி பேசிய அரசியல் சம்பந்தமான பேச்சுகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. ரஜினி ரசிகர்கள், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்த போதிலும், வெளிப்படையாக எவ்வித முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் vs ஜெயலலிதா
1996 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது என்றார் ரஜினி. அந்தத் தேர்தலில் அதிமுக போட்டியிட்ட 168 இடங்களில் வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. திமுக மாபெரும் வெற்றியடைந்தது. பர்கூரில் போட்டியிட்ட ஜெயலலிதாவே தோற்றுப் போனார். அந்த காலகட்டத்தில் திரைப்படங்களில், தொடர்ச்சியாக அரசியல் வசனங்களைப் பேசி நடித்தார் ரஜினி.

பின்வாங்கிய ரஜினி
இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியின் போது ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்ற பேச்சுகள் அரசியல் களத்தைச் சூடாக்கின. தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும், அதனால் நான் அரசியலுக்கு வருவது உறுதி. நான் முன்னெடுக்க உள்ள அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் அறிவித்தார். பின்பு தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று பின்வாங்கினார் ரஜினிகாந்த்.

பிடிகொடுக்கவில்லை
எனினும், அவரது ரசிகர்கள், ரஜினியை அரசியலுக்கு அழைத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். பாஜக, கடந்த தேர்தலின்போதே ரஜினியை தங்களுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்க வைக்க முயன்றது. ஆனால், ரஜினி அதற்கும் பிடிகொடுக்கவில்லை. பிரதமர் மோடி உட்பட பல பாஜக தலைவர்களுடன் நல்ல நட்பில் இருக்கும் ரஜினியை தங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வைக்க பாஜக தலைமை பல வழிகளிலும் முயன்று வருவதாகவே கூறப்படுகிறது. இதற்கு மத்தியில் தான், சில வாரங்களுக்கு முன்னர், தமிழக ஆளுநரை சந்தித்து 'அரசியல்' பேசியிருந்தார் ரஜினிகாந்த்.

பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம்
இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், ரஜினிகாந்த்தின் பிறந்தநாளான இன்று அவரைப் பற்றிப் பேசியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலை முன்னெடுத்தவர். ரஜினிகாந்த்தின் கருத்துகள் மேன்மை பெற பாஜக வலிமை பெற வேண்டும். நேரடி அரசியலில் அவர் ஈடுபடாவிட்டாலும் திராவிட மாயையை அகற்றவும், மோடிக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் அர்ஜூன் சம்பத்
புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி அண்மையில் இறந்த நிலையில், ஓரிரு நாட்களுக்கு முன்பு யானை உருவ பொம்மையை அங்கு சிலர் அமைத்தனர். அரசு அனுமதியின்றி அமைக்கப்பட்ட அந்தச் சிலையை நேற்று இரவு அகற்றிய நிலையில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று புதுச்சேரி வந்தார். யானை லட்சுமி இறந்த இடத்தில் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

ஆன்மிக அரசியல்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜூன் சம்பத், நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலை முன்னெடுத்தவர். அக்கருத்துகள் மேன்மை பெற பாஜக வலிமை பெற வேண்டும். நேரடி அரசியலில் அவர் ஈடுபடாவிட்டாலும் திராவிட மாயையை அகற்றவும், மோடிக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றார்.

ஸ்டாலின் ஆசை நிறைவேறாது
அவரிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரியில் திமுக ஆட்சி அமையும் எனப் பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அர்ஜுன் சம்பத், புதுச்சேரி மக்கள் தேசியத்தின் பக்கமுள்ளவர்கள். அதனால் திராவிட அரசியலை ஏற்க மாட்டார்கள். மு.க.ஸ்டாலின் விருப்பமான புதுச்சேரியில் திமுக ஆட்சி என்ற ஆசை நிறைவேறாது" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications