பில்லி, சூனியம் இல்ல.. பயப்படாதிங்க.. யூனிபார்ம் காய போட்டுருக்கோம்.. ஷாக் தந்த புதுச்சேரி போலீஸ்
புதுச்சேரி: புதுச்சேரியில் காவல் நிலைய வாசலிலேயே போலீசார் தங்களது யூனிபார்மை அங்குள்ள மரத்தில் காயவைத்து, ஷீக்களை மரத்தில் தொங்கவிட்டுள்ளது பொதுமக்களை குழப்பி விட்டது.
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் தன்வந்திரி நகர் காவல்நிலையம் உள்ளது. இங்கு ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமை காவலர் என 10 க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த காவல்நிலையம் நகரின் மையப்பகுதியில் உள்ளதால், கொலை, கொள்ளை, மோசடி என பல்வேறு வழக்குகளால் எப்போதும் பரபரப்புடனே காணப்படும்.

இந்நிலையில் தன்வந்திரி நகர் காவல் நிலைய வாசலிலேயே போலீசார் தங்களது யூனிபார்மை அங்குள்ள மரத்தில் காயவைத்து, ஷீக்களை மரத்தில் தொங்கவிட்டு வருகின்றனர்.

இது காவல்நிலையத்திற்கு வரும் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. மேலும் மரத்தில் ஷீக்களை கட்டிவிட்டு தொங்கவிட்டிருப்பதை பார்க்கும்போது, ஏதோ பில்லி, சூனியம் வைத்ததுபோல் தோன்றுகிறது.

இவற்றை உடனடியாக அகற்றி, காவல்நிலையத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டுமென்பதே காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications